என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து நாளைய விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (21-ந்தேதி) மாலை 3 மணிக்கு நடக்கிறது.
கட்சி தலைவர் கமல்ஹாசன் விழாவில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். கமல்ஹாசன் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சியினர் மத்தியில் பேச இருப்பதால் அவர் என்ன பேசப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசன் வருகிற ஜூலை மாதம் மேல்சபை எம்.பி.யாகி டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றியும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றியும் கமல்ஹாசன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து நாளைய விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்க விழாவையொட்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரான அருணாச்சலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தனது கொள்கையில் இருந்து சிறிதும் விலகாமல், தலைவர் காட்டும் பாதையில் பயணித்து, அரசியலில் பீடுநடை போட்டுவரும் மக்கள் நீதி மய்யத்துக்கு நடப்பாண்டும், வரும் ஆண்டும் வரலாற்றுத் திருப்புமுனைகளாக மாற உள்ளன.
மண், மொழி, மக்களைக் காக்கும் விஷயங்களில் சிறிதும் சமரசமின்றி, தொடர்ந்து களத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் 8-ம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாட உள்ளோம்.
கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கும் இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்களைத் தவிர்த்து இதர மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும், அவரவர் சார்ந்த மாவட்டம் மற்றும் தொகுதி அலுவலகங்களில் கட்சிக் கொடியேற்றியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் 8-ம்ஆண்டுத் தொடக்க விழாவை சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும்.
சென்னை:
1991 முதல் 1996 வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தி சட்ட விரோத சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையில் ஜெயலலிதா வீட்டில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் நகைகளில் மட்டும் விதவிதமான தங்க செயின்கள், வளையல்கள், தங்க கை கடிகாரங்கள், கடிகாரத்தின் தங்க வார்கள், தங்க தட்டுகள், தங்க கிரீடம் நெத்திச்சுட்டி, தங்க ஒட்டியானம், தங்க காசு மாலை, நெக்லஸ்கள் என 481 வகையான தங்க நகைகள் இடம்பெற்றிருந்தது.
இதில் தங்க ஒட்டியானம் 1.2 கிலோ, தங்க வாள் 1.5 கிலோ, தங்க கிரீடம் ஒரு கிலோ, 1, 600 கிராம் எடை கொண்ட தங்க எழுதுகோல், ஜெயலலிதா ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற தங்க சிலை ஆகியவை மிகப் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றன.
அத்துடன் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாங்கி குவித்திருந்த 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட போது ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்பிறகு மேல் முறையீடு வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அதன்படி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்து விட்டனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஜெ.தீபா, தீபக் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள 27 கிலோ தங்கம், வைரம், முத்து, மாணிக்கம், பவள நகைகள் மற்றும் 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களை பெங்களூரில் நீதிபதி மோகன் முன்னிலையில் கடந்த 14-ந் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவற்றை தமிழக உள்துறை இணை செயலாளர் ஆனி மேரி, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு விமலா, கூடுதல் சூப்பிரண்டு புகழ்வேந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நகைகளை ஏலம் விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-
ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் கலெக்டர் மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்குவார்கள். இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் நடைபெறும்.
அ.தி.மு.க. ஆட்சியாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் நகைகள் விற்கப்படாமல், ரிசர்வ் வங்கி அல்லது அருங்காட்சியகத்தில் வைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனால் இப்போது ரிசர்வ் வங்கி மூலமாகவோ அல்லது ஏலம் மூலமாகவோ பணமாக்கி கொள்ளலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அதன்படி அரசு செயல்படும்.
கட்டிடங்கள், இடங்கள், நிலத்தை பொறுத்தவரை சிட்கோ, அல்லது டான்சி மூலம் அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது விற்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ மற்றும் வில்சன் எம்.பி. ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் பல ஏக்கர் நிலங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏலம் விடும் பணிகள் தொடங்கும்.
ஜெயலலிதா வழக்கை பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில் இருந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையாண்டு வந்துள்ளதால் அவர்களுடன் சேர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் கலெக்டர் மேற்பார்வையில் இவற்றை ஏலம் விடும் பணியை தொடங்குவார்கள் என தெரிகிறது.
இதை யார் மூலம் செயல்படுத்துவது என்பது பற்றி கோர்ட்டு தெளிவாக கூறி இருக்கும். அதன் நகலை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. இன்று அல்லது நாளை வந்ததும் விளக்கமாக தெரிவிக்கிறோம் என்றனர்.
- எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்.
- 'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்.
தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,
எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். இதை சரியான களமாக மாற்ற வேண்டும். வரி கொடா இயக்கம் தொடங்குவோம். சுங்கக் கட்டணத்தைத் தவிர்ப்போம். ஜி.எஸ்.டி கொடுக்க மாட்டோம் என முடிவு எடுப்போம். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தையும் முடக்குவோம் என முடிவு எடுங்கள். மோடி நம் முன் மண்டியிடுவார்.
நம்முடைய ஆட்கள் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்கு கூட பா.ஜ.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை.. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகத்தை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்." என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என பெண் உரிமைகளை பறைசாற்றிய பாரதி மண்ணில், பெண் அமைச்சர் அடக்கமாக இருக்க வேண்டும் என மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.
- இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
- நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
சென்னை :
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது" என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "அலுவல் மொழிச் சட்டம், 1963"-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுதவிர, தேசியக் கல்விக் கொள்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட தனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளதாக கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான "சமக்ர சிக்ஷா" திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளதோடு, குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
- குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
- நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர்.
மன்னார்குடி:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார் குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை கொடுப்பதற்காக தமிழ்நாடு வேளாண் துறை மூலம் விளைநிலங்கள் குறித்து கணினி பதிவேற்றம் நடைபெற்று வருகிறது. தமிழக நிலப்பரப்பில் 60 சதவீதம் கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
குத்தகை விவசாயிகளுக்கும் உரிய அடையாள அட்டை வழங்குவதற்கான கணினி பதிவேற்றம் செய்திட தமிழக அரசு அவசர கால நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் திறந்தவெளி கிடங்குகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த சில ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அறுவடை தொடங்கி உள்ளதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகங்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர். எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்தவெளி கிடங்குகளை திறந்து நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு விரைந்து அனுப்புவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றார்.
- தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்.
- அமித் ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு படுத்தி பேசியும் மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க பிப்ரவரி 25-ல் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு, மாநில அரசை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
- நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களை புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும்.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரி அருகே கரடி அள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான், நிதியுதவி கிடைக்கும் என மத்திய மந்திரி கூறுவது, சர்வாதிகார மனப்பான்மையை காட்டுகிறது. மும்மொழி கல்வி கொள்கைகயை அ.தி.மு.க. எந்த சூழ்நிலையி லும் ஏற்காது. அ.தி.மு.க. பொருத்தவரை அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுகிறோம். அண்ணா எதிர்த்த கொள்கைகளை நாங்களும் எதிர்க்கிறோம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்காக பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார். மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும். அரசியல் வேறு, ஆட்சி வேறு. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக சென்றதால் தான், தமிழகத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், மெட்ரோ ரெயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு, மாநில அரசை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மேலும், மத்திய அரசு பணிகளில் ஏற்கனவே, தென்மாநில மக்களின் வேலைவாய்ப்புகள் பறிப்போகிறது. தற்போது மொழியை திணிப்பதன் மூலம் எதிர்காலத்தில், வேறு திட்டங்களை புகுத்தி மாநில அரசை அடிமையாக கொண்டு வந்துவிடும்.
மேலும், மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் புத்தகமாக அச்சிட்டு வழங்கியதை போல், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் விவரங்களையும் புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவது தான். முதலமைச்சர் இதன் மீது கவனம் செலுத்தி கடுமையான எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
- வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டத்தில் அதிக நீர் பிடிப்பு கொண்ட ஏரி வீராணம் ஏரியாகும்.
இந்த ஏரி சேத்தியாதோப்பு பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளத்துடன், 5 கிலோ மீட்டர் அகல பரப்பளவு கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். 1465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
ஏரியில் இருந்து சம்பா பருவத்தில் கீரப்பாளையம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, புவனகிரி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கடைமடை டெல்டா பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் ஏரியின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துள்ளதால் ஏரியில் 1465 மில்லியன் கன அடியாக இருந்த தண்ணீர் தற்போது 1,011 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.
ஏரியில் தண்ணீர் குறைந்து வருவதால் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடையில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
- கல்லூரியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஸ்காட் கலைக்கல்லூரியை சேர்ந்த 34 மாணவ-மாணவிகள் மற்றும் 3 பேராசிரியர்கள் ஆனந்தமாக சென்ற சுற்றுலா சோகத்தில் முடிந்து உள்ளது.
கேரள மாநிலம் மூணாறுக்கு அவர்கள் சென்ற பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பலியானதே இந்த சோகத்திற்கு காரணம்.
மூணாறு வட்டவடை பகு தியை பார்வையிட சென்ற போது தான் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அஞ்சுகிராமம் கனகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மகள் வேனிகா (வயது 19), திங்கள் சந்தை அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த ராமு மகள் ஆத்திகா (18) சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.
35 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேரில் ஒரு மாணவர் இறந்து விட்டார். அவரது பெயர் சுதன் (19).
இவர் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர். விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தின ரிடையே மட்டுமின்றி அவர்கள் படித்த கல்லூரியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுற்றுலா முடிந்து சந்தோஷமாக ஊருக்கு வருவார்கள் என பெற்றோர் நினைத்திருந்த நிலையில், அவர்களது மரணச் செய்தி வந்தது பலியான மாணவ-மாணவிகளின் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர்கள் தங்கள் குழந்தைகளின் தோழிகள் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. இதற்கிடையில் கல்லூரியில் இருந்து விபரம் கிடைக்கப் பெற்று பலியான மாணவிகளின் பெற்றோர் இங்கிருந்து புறப்பட்டு மூணாறு விரைந்தனர்.
அவர்கள் தங்கள் மகள்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். மூணாறு ஆஸ்பத்திரியில் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் 2 மாணவிகளின் வீடுகளிலும் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் திரண்டனர். அவர்கள் சோகத்துடன் கண்ணீர் வடித்தபடி அங்கிருந்தனர்.
பலியான ஆதிகாவின் தந்தை ராமு, திருவிழா கடையில் மிட்டாய் செய்யும் தொழிலாளி. இவரது மற்றொரு மகள் மணவாளக்குறிச்சி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தனது கஷ்டமான சூழ்நிலையிலும் மகள்களை ராமு நன்றாக படிக்க வைத்துள்ளார்.
இதனை தற்போது நினைவு கூர்ந்த உறவினர்கள், ஆத்திகாவின் கல்லூரி படிப்பு இன்னும் ஓராண்டில் முடிந்து விடும். அதன்பிறகு வேலைக்குச் சென்று குடும்பத்தின் கஷ்டம் தீர உதவியாக இருப்பார் என அனைவரும் நினைத்த நேரத்தில், பஸ் விபத்தில் அவர் இறந்து விட்டார் என்ற தகவல் இடியாக விழுந்துள்ளது எனறனர்.
விபத்தில் பலியான மற்றொரு மாணவி வேனிகாவும் ஏழ்மையான குடும்ப த்தை சேர்ந்தவர் தான். இவரது தந்தை ரமேஷ், கட்டிட தொழிலாளி. இவரும் தனது 3 குழந்தை களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். இதில் மூத்தவர் தான் பலியான வேனிகா. படிப்பில் திறமையான இவர், அனைவரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பழகுவார் என உறவினர்கள் வேதனையுடன் கூறினர்.
இதேபோல் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவர் சுதன் உடலும் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடலை வாங்கிய உறவினர்கள், சொந்த ஊரான ஏர்வாடிக்கு புறப்பட்டனர்.
- சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
- பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'இது பெரியார் மண்' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.
பெரியாரை கொச்சைப்படுத்தி கல் எறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என நாம் தமிழர் கட்சி இருக்கிறது என நினைக்கிறேன். சீமான், பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்தால், எதிர்வினை ஆற்ற எங்களால் முடியும்.
பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்வது ஏன்?. ஈனபையன் சீமான் பெரியார் பற்றி தவறாக பேசுகிறார். எங்கே சோறு கிடைக்கும் என்று பா.ஜ.க தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
திராவிட இயக்கத்தை ஏன் பா.ஜ.க குறி வைக்கிறது என்றால், பெரியார் திராவிட இயக்கத்தினை முன் வைத்து வழிநடத்திச் செல்வதால் தான். சீமான் திராவிடத்தையும், தமிழ் தேசியம் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா? திராவிடம் என்றால் தாலாட்டு குழந்தை போன்று தெரிகிறதா?.
சீமான், ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.400 கோடியும், பா.ஜ.க.விடம் இருந்து ரூ.300 கோடியும் வாங்கினார். தானே பேசி தானே சிரிக்கும் பழக்கம் சீமானிடம் உள்ளது. பெரியார் பற்றி கொச்சையாக சொன்னதற்கு சீமானிடம் ஆதாரம் இருக்கிறதா?
பிரபாகரனை சீமான் சந்தித்தாராம்? சந்தித்தவர்கள் யாரும் சொல்லவில்லை. உலகத்தில் நிகரற்ற வீரன் நேற்றும், இன்றும், நாளையும் பிரபாகரன் தான்.
சீமான் பா.ஜ.க.வின் கைக்கூலி, அடியாள் என 10 வருடமாக சொல்லி வருகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது. கட்சியின் இறுதி ஊர்வலம் ஈரோட்டில் தான் நடக்கும்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையே இறக்குமதி செய்யப்பட்டவர் தான். ஆனால் எப்போது அவர் ஏற்றுமதி செய்யப்படுவார் என்று அந்த கட்சியில் இருப்பவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
முருகனை வைத்து சீமான் அரசியல் செய்யலாம் என்று பார்க்கிறார். ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று சொல்லும் அண்ணாமலை, எப்போது ஆட்சிக்கு வருவார்கள் என அவரே சொல்லட்டும்.
கூவம் பாவத்தை போக்கினால் போக்கும், நத்தை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறும். ஆனால், பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது. பா.ஜ.க.விற்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது, கிடைக்க விடமாட்டோம்.
அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினாலும், பயப்பட மாட்டோம். பெரியார் கொள்கை மீட்டெடுக்க சாவக்கூட தயார். 100 ஆண்டுகள் கடந்தும் பெரியார் வாழ்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர்.
- கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். இதுவரை 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில் தென்காசி பகுதியில் இருந்து 40 பேர் கொண்ட குழு உத்தரபிரதேச மாநிலம் மகா கும்பமேளாவுக்கு செல்ல திட்டமிட்டு, காசிக்கு ரெயில் மூலம் யாத்திரை சென்றனர்.
இந்த குழுவினர் கும்பமேளாவில் நீராடி விட்டு அயோத்திக்கு சென்றபோது ராமலட்சுமி, கஸ்தூரி என்ற பெண்கள் மாயமாகினர்.
கும்பமேளா சென்ற 2 தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உத்தரபிரதேச காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பெண்கள் மாயமானது தொடர்பாக உ.பி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க.வை வேரோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கிறார்கள்.
- தி.மு.க. எனும் தீய சக்தியை வேரோடு அறுத்து தூக்கி எறிய வேண்டும்.
கரூர்:
கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வை வேரோடு, மண்ணோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கிறார்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எனும் தீய சக்தியை வேரோடு அறுத்து தூக்கி எறிய வேண்டும். தவறினால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
உலகத்தில் எங்கேயும் இல்லாத சாதனையை மத்தியில் 8 முறை திருச்சியை சார்ந்த தமிழ் பெண் பட்ஜெட் கொடுத்து இருக்கிறார். இதுவே சரித்திர சாதனை.
இது வளர்ச்சியின் பட்ஜெட், இதுவரை முதல்வர் பட்ஜெட் குறித்து பேசியது இல்லை. ஆனால், மத்திய பட்ஜெட் குறித்து விமர்சிக்க கூட்டம் போடுகிறார்கள். இந்த் ஆண்டு 51 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட்டப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டாக போடப்பட்டுள்ளது.
2 லட்சத்து 20 ஆயிரம் தனிநபர் வருமானமாக வளர்ந்து இருக்கிறோம். வளர்ச்சி பாதையில் நம் நாட்டை மோடி அழைத்துக் கொண்டு இருக்கிறார். இந்தியாவில் 87 சதவீதம் பேர் வரி கட்ட வேண்டாம் என விலக்கு அளித்து இருக்கிறார்கள். இந்த இழப்பு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாகும்.
தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை என முதல்-அமைச்சர் பேசுகிறார். காங்கிரஸ் ஆண்ட 10 வருட காலத்தில் வரி பகிர்மானம், 2004 முதல் 2014 வரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 900 கோடி நேரடியாக கொடுத்தது.
ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில் 6 லட்சத்து 14 ஆயிரம் கோடி நேரடியாக கொடுத்து இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் 2030 முடியும் போது 2 லட்சம் பேர் மருத்துவம் படிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியை விட 5 மடங்கு அதிகமாக நேரடி நிதியாக கொடுக்கிறோம்.
நான்கரை லட்சம் கோடி பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. மோடி தமிழகத்திற்காக கொடுக்கிறார். தமிழக மக்கள் மீது உணர்வுபூர்வமாக வைத்துள்ள நம்பிக்கை மனிதர் மோடி.
தண்ணீர், போக்குவரத்து, கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து என்னிடம் மோடி கேட்டுக் கொள்வார். குற்றம் இருந்தால் டெல்லியில் இருந்து போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
உதயநிதி ஸ்டாலின், மோடி வந்தால் இனி கெட் அவுட் மோடி சொல்வோம் என்கிறார். நீங்கள் சொல்லி பாருங்கள். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி, இன்னும் கைது செய்யப்படவில்லை, தலைமறைவாக இருக்கிறார்.
இதே ஊரில் 20 வருடம் கழிப்பறையை பார்த்தது கிடையாது. சைக்கிள், பேருந்தில் போய் படித்தவன் நான். கல்வியின் பெருமை எனக்கு தெரியும். மோடி கல்விக்காக மட்டும் தான் என்னை மதிக்கிறார்.
3-வது மொழியாக ஒரு விருப்பப்பட்ட மொழியை படியுங்கள் என்கிறார். இதில் எங்கே இந்தியை திணிக்கிறார். உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக விருப்ப மொழியை படிக்க சொல்கிறார்.
அன்பில் மகேஷ் சொந்த ஊர் ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளியை இடித்து, மரத்துக்கு அடியில் போர்டு வைத்து படிக்கிறார்கள். ஆனால், அவர் பையன் பிரெஞ்சு படிக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஹிந்தி படிக்க கூடாது என்கிறார்கள்.
52 லட்சம் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க. நடத்தும் பள்ளிகளில் 3 மொழி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க.வின் கபட நாடகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள். ஆனால், மோடி 2190 கோடி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.
பெண்களுக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அசாமில் 830, மத்திய பிரதேசத்தில் 1250, சட்டீஸ்கரில் 1000, மஹாராஸ்டிராவில் 2100 உதவித் தொகை பெண்களுக்கு கொடுக்கிறோம்.
டெல்லியில் மகளிருக்கு 2500 ரூபாய் கொடுக்கிறார்கள். இங்கு உரிமை தொகை என்கிறார்கள்.
பா.ஜ.க. ஆட்சியில் அமரும் போது 2500 ரூபாய்க்கும் அதிகமாக கொடுப்போம். கமிசன் அடிக்காத கூட்டம் பா.ஜ.க. கூட்டம். எங்களிடம் இருந்து நியாயம், நேர்மையை உங்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறோம்.
கட்டுகோப்பான காவல் துறையை வீதியில் இறக்கி விட வேண்டும். பிஞ்சு குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை. 18 வயதுக்கே ஒன்னும் தெரியாத போது, 8 வயது குழந்தை மீது கை வைக்கிறார்கள்.
நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள். விஜய் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கிறது. பா.ஜ.க. உங்களோடு இருக்கிறது. வருகின்ற காலகட்டத்தில் பா.ஜ.க.வுடன் இருங்கள், 2026 மாற்றம் இல்லை என்றால், எப்போதும் மாற்றம் இல்லை.
தி.மு.க. சொந்தங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன், 3 மொழியையும் படிக்க வையுங்கள். உங்கள் குழந்தைகள் பா.ஜ.க. தலைவர்களாக வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






