என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இருந்து வருகிறார்.
- இவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் கே.ஆர். ஸ்ரீராம். இவர் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
- ரெயிலில் கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
- கர்ப்பிணி தடுக்கவே, ரெயில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்.
திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தார்.
அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளார்.
அதை அப்பெண் தடுக்கவே, அப்பெண்ணை தாக்கி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கருச்சிதை ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில், ஹேமராஜ் மீது கொலை முயற்சி, பாலியல் தொல்லை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை முடிவில் ஹேமராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என அறிவித்தது.
அதன்படி இன்று, மேஹராஜிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார்.
- போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் கோவையில் 2 நாட்கள் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் இன்று தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.
கோவை டாடாபாத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் தொடங்கியது. போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று.
ஆனால் கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
மேலும் தமிழ்நாட்டில் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் இந்த போராட்டம் நடக்கிறது" என்றார்.
- அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், வீடுகளுக்கே விண்ணப்பங்களை வந்து கொடுக்கும் புதிய திட்டம்.
- விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற புரட்சிகரத் திட்டம் நாளை தொடங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்!
அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்!
10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
- மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 1991-ம் ஆண்டு பலரை வேலையில் அமர்த்தியது. பின்னர், அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களுக்கு மாற்று பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
இதன்படி சேக் அப்துல் காதர், எல். அழகேசன், பி.சர்மிளா பேகம் உள்பட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவர்கள் பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால், இவர்களது பெயர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப் பட்டன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ''எங்களுக்கு பணி வழங்க சுப்ரீம் கோர்ட்டு 1999-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, எங்களது பணி 1996-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி முதல் கணக்கிட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை காலதாமதமாக நிறைவேற்றி, எங்களது பெயரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியாது'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ''சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, மனுதாரர்களை 1996-ம் ஆண்டு பணிவரையறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயர்களை சேர்க்க வேண்டும்'' என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மனுதாரர்கள் சென்னை ஐகோர்ட்டில், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவம திப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகளையும் வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
- பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமான அதிக செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
- உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் தமிழக அளவில் பாளையங்கோட்டை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறும்.
நெல்லை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு, தேர்தல் பிரசாரம் என தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் முதலமைச்சரும், கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
இது போன்ற சூழ்நிலையில் துணை முதலமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என நிர்வாகி ஒருவர் நெல்லையில் ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வின் 30-வது வார்டு செயலாளர் தென்கரை முத்து சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும், கனவும் நிறைவேற உதயநிதி ஸ்டாலின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும். வேண்டும், வேண்டும் உதய் அண்ணா வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் நெல்லை மாநகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் தற்போது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பொதுவாக கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமான அதிக செல்வாக்கு உள்ள தொகுதியை தேர்ந்தெடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வருகிறது. அதே சமயம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியும் தொடர்ந்து பலமுறை தி.மு.க வெற்றி பெற்று வரும் தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ச்சியாக 5 முறை தி.மு.க. வேட்பாளர்களே வெற்றி பெற்று வருகின்றனர்.
பொதுவாக பாளையங்கோட்டை தொகுதி என்றாலே தி.மு.க. வின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் அங்கு போட்டியிட வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் அவ்வாறு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் தமிழக அளவில் பாளையங்கோட்டை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று (13-07-2025) மாலை, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (14-07-2025) காலை 05.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவியது. இது 08.30 மணி அளவில், மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19-ந்தேதி மற்றும் 20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 ° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 2024 தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் ராபர்ட் புருஸ் பெற்ற வெற்றி செல்லாது என வழக்கு.
- சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
தேர்தல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2024 தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் ராபர்ட் புருஸ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி நயினார் வழக்கு தொடர்ந்தார்.
ராபர்ட் புருஸ் தன் மீதான வழக்கு விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
- இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும், அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
"காலை 11 மணிக்கி ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்" என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர். இந்த மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால், கொள்ளையர்களின் பதில் மிரட்டல், கொலை!
இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல; அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது.
இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி:
புழல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சில் 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் மொத்தமாக குடிநீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க ஒரு குடிநீர் பாட்டிலை எடுத்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
- அ.தி.மு.க. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நோக்கம்.
- ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கவில்லை.
சென்னை:
சென்னையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நோக்கம். அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை. உடன் இருப்பவர்களுக்கு பதவி பெற்றுத்தரப்படும். அ.தி.மு.க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதால் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கவில்லை. கட்சி தொடங்கிய பிறகு விஜய் இன்று வரை நன்றாக தான் செயல்பட்டு வருகிறார். விஜய்க்கு எங்களது தார்மீக ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
- எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை.
சென்னை:
சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல்துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தவில்லை.
இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளது. மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட கோர்ட்டு பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும்.
இதை விடுத்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை.
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து வருகிற 23-ந்தேதி அறிக்கையை டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்டுகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்" என்று உத்தரவிட்டார்.






