என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தடையின்றி நடக்கும் மணல் கொள்ளை - இ.பி.எஸ்.
- ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
- இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும், அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
"காலை 11 மணிக்கி ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்" என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர். இந்த மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால், கொள்ளையர்களின் பதில் மிரட்டல், கொலை!
இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல; அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது.
இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.






