என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன- டி.ஜி.பி., கமிஷனருக்கு ஐகோர்ட் கேள்வி
- பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
- எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை.
சென்னை:
சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல்துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தவில்லை.
இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளது. மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட கோர்ட்டு பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும்.
இதை விடுத்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை.
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து வருகிற 23-ந்தேதி அறிக்கையை டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்டுகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்" என்று உத்தரவிட்டார்.






