என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தி.மு.க. மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
- தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார்.
- போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வாரம் கோவையில் 2 நாட்கள் முகாமிட்டு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் இன்று தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.
கோவை டாடாபாத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் தொடங்கியது. போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கியுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று.
ஆனால் கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
மேலும் தமிழ்நாட்டில் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் இந்த போராட்டம் நடக்கிறது" என்றார்.






