என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
- 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது
மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.
வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ்) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.
சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.
தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்
வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 48). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கமாடத்தெரு பகுதியில் உள்ளது. அதில் வீடு கட்ட அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து நகராட்சியில் கட்டிட பிளான் அலுவலகத்தில் கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதி மணி (56) என்பவரிடம் முறையாக அனுமதி கோரி மனு செய்துள்ளார். மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தையும் முறைப்படி செலுத்தி உள்ளார்.
இது தொடர்பாக நேற்று கட்டிட அமைப்பு வரைபட ஆய்வாளர் ஜோதி மணியை அணுகியபோது, அவர் கட்டிட வரைபட அனுமதி கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் லஞ்சம் கொடுக்க விருப்பமின்றி விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சால்வன் துரை ஆகியோரிடம் புகார் அளித்தார்.
அந்த புகார் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் அறிவுரைப்படி ரசாயணம் தடவிய பணத்தை வாசுதேவனிடம் கொடுத்து அனுப்பினர். இந்தநிலையில் இன்று காலை வாசுதேவன் லஞ்ச பணத்துடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஜோதிமணி, நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து தருமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ.10 ஆயிரம் பணத்தை ஜோதிமணி பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் தனி அறையில் வைத்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பெண் அதிகாரி ஜோதிமணி லஞ்சம் வாங்கி பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
- சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சிறுத்தை ஒன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை நீர் வழி பாதை வழியாக அரியலூர் மாவட்டம் சென்று இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்து 2 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தனது தேடுதல் வேட்டையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுத்தியது.
இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை தென்பட்டதாகவும் அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் நேற்று முன்தினம் இரவு கட்டுமான தொழிலாளி ஒருவர் வனத்துறையினரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சற்று பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்து அதனை சுற்றி அடையாளம் காண, சுன்னாம் பால் வட்டம் வரைந்து மூடி, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதனால் சிறுத்தை அரியலூரில் இருந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்ததா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
- பெருமாள் 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
- விடிய விடிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார்.
குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள் அதனைத் தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் அளித்தார். எதிர்சேவையில் தாடிக்கொம்பு ரோடு கருப்பணசாமி கோவிலில் தங்கிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் தங்கினார். அங்கிருந்து நேற்று காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பாடான பெருமாள் கிழக்கு ரத வீதி, தெற்குத் தெரு, மேட்டுப்பட்டி, பெரியகடை வீதி, மேற்கு ரத வீதி, மதுரை ரோடு, மெயின் ரோடு வழியாக வெள்ளை விநாயகர் கோவில் அருகே உள்ள தனியார் மஹாலுக்கு வந்தடைந்தார்.
அங்கு சவுராஷ்டிர மகாஜன சபையினரின் மண்டகப்படி நடைபெற்றது. இதில் பெருமாள் மச்ச அவதாரம், கூர்மம், வராக, நரசிம்ம, வாமண, ராமர், பலராமர், பரசுராமர், கிருஷ்ணர் மற்றும் மோகினி என 10 அவதாரங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
ஒவ்வொரு அலங்காரத்திலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. விடிய விடிய காத்திருந்து 10 அவதாரங்களில் தோன்றிய பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளின் திரு அவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் பெருமாள் தாடிக்கொம்பு சென்றடைகிறார்.
- ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.
- ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் கடந்த 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது.
அதன்படி நெல்லூர் அருகில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் தர வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டு ஜூன் முதல் மே வரை 2½ டி.எம்.சி.கிருஷ்ணா தண்ணீர்தான் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. அதன் பிறகு சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு இருந்தது. இதனால் கிருஷ்ணா தண்ணீரை உடனே தருமாறு வலியுறுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டதின் காரணமாக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அதனால் கிருஷ்ணா தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தியது.
இப்போது கோடை காலமாக இருப்பதால் இரு மாநிலத்திற்கும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
ஆனால் கண்டலேறு அணையில் இப்போது 6 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது. (கொள்ளளவு 68 டி.எம்.சி.) இதனால் கிருஷ்ணா தண்ணீரை இப்போது திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு கூறி உள்ளது.
4 மாதமாக அணை திறக்கப்படாத நிலையில் மழை பெய்யும் பட்சத்தில் ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட ஏற்பாடு செய்வதாக ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சுற்றி உள்ள ஏரிகளில் இப்போது 6.980 டி.எம்.சி. (கொள்ளளவு 13.213 டி.எம்.சி.)தண்ணீர் இருப்பு உள்ளதாகவும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் கிடைத்து வருவதாலும் குடிநீரை கட்டுப்பாடின்றி வினியோகித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர குன்றத்தூர் திரிசூலம் பகுதிகளில் உள்ள கல் குவாரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் அதை வைத்து குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், வனபத்ர காளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்ட பாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கோர்ட்டு அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொட ர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் 4 பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32), துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோட்டார் போலீசார் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று பால்ராஜிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது அந்த வாலிபர் பால்ராஜை தாக்கியதும் தெரியவந்துள்ளது.
மேலும் நள்ளிரவு மீண்டும் பால்ராஜை அவர் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த வாலிபரின் முகம் பதிவாகியுள்ளது.
ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலையாளியின் புகைப்படத்தை கோட்டார் போலீசார் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டார் போலீசார் மற்றும் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 4 வழக்குகள் தற்கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் டிரைவர் ஒருவர் பிணமாக கிடந்ததை வடசேரி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. இதேபோல் கோட்டார் பகுதியில் கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
இதுபோல் மாவட்டத்தில் வேறு 2 வழக்குகளும் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து இருந்தார். மேலும் அதற்கான கட்டணம் ரூ.42 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார்.
இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் உதவி பொறியாளருக்கு ரூ.3 ஆயிரமும், ஊழியர்களுக்கு கொடுக்க ரூ.6 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முகமது பிலால் இன்று காலை மீண்டும் வணிக ஆய்வாளரை சந்தித்தபோது ரூ.9 ஆயிரம் பணத்தை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கறாராக கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுத்தலின்பேரில் ரசாயணம் தடவிய ரூ.9 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் இன்று காலை முகமது பிலால் கொடுத்தார். அப்போது அதில் ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மீதி பணம் ரூ.6 ஆயிரத்தை அங்கு பணிபுரியும் வயர் மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.
அதன்படி இருவரும் ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
- பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாசில்தார் கோவி ந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
- வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள முகையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 40). இவர் தி.மு.க. மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். அதே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சாந்தி பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆ.கூடலூர் மற்றும் ஆயந்தூர் ஆகிய இரு கிராமங்களுக்கு ஆயந்தூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த வாக்குச்சாவடி மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சாந்தி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு இரவு உணவை அருகில் உள்ள உணவகத்தில் இருந்து வி.ஏ.ஓ. சாந்தி வாங்கி வந்தார்.
தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தியும் அதே கடையில் உணவு வாங்கினார். அப்போது ராஜீவ் காந்திக்கு கட்டி வைத்த உணவை கிராம நிர்வாக அலுவலர் சாந்தி எடுத்துக் கொண்டு வந்தாக கூறி, வாக்கு சாவடி மையத்திற்கு சென்ற தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சாந்தியினை சரமாரியாக தாக்கினார். இதைக்கண்ட சக ஊழியர்கள், தி.மு.க. கவுன்சிலரை தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காணை போலீஸ் நிலையத்தில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ் காந்தி, தன்னை அவதூறாக பேசி தாக்கி, மானபங்கம் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் ராஜீவ்காந்தி இன்று கைது செய்யப்பட்டார். ராஜீவ்காந்தியை கைது செய்யக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகாரளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது.
- 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் அதிகளவில் விமானங்கள் வருவது வழக்கம். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பயணிகளின் உடமைகள், பாஸ்போர்ட் போன்றவற்றை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.
பரபரப்பாக காணப்படும் விமான நிலையத்தில் நேற்றிரவு தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சோதனை செய்யக் கூடிய பகுதிக்கு அருகில் இருந்த ஒரு குப்பை தொட்டியை சுத்தம் செய்த போது அதில் ஒரு பார்சல் இருந்தது. அதனை எடுத்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
பின்னர் இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன. 1,200 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.75 லட்சம் என கணக்கிடப்பட்டது.
வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பயணி யாரோ ஒருவர் பரிசோதனையின் போது சிக்கி கொள்வோம் என பயந்து குப்பை தொட்டியில் போட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவினை ஆய்வு செய்தனர். அதில் முகம் தெளிவாக தெரியவில்லை. அதனை தொடர்ந்து மற்ற கோணங்களில் பதிவான கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலாதேவி (வயது 38). இந்தநிலையில் தான் பணியாற்றிய கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் சிலரை மூளைச்சலவை செய்துள்ளார்.
மாணவிகளின் குடும்ப வறுமை மற்றும் ஏழ்மை நிலையை தெரிந்துகொண்டு அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு வழிநடத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலாதேவி, அவருக்கு உடந்தையாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பிலும் விசாரணை முடிந்து இறுதி வாதங்களை தொடர்ந்து இன்று (26-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் 10.15 மணி வரை பேராசிரியை நிர்மலாதேவி வரவில்லை. இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக முடியாத நிலை இருப்பதாக அவரது வக்கீல் சார்பில் மனு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று வழங்கப்படுவதாக இருந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.






