search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சார கம்பியை மாற்றி அமைக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது
    X

    மின்சார கம்பியை மாற்றி அமைக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி உள்பட 3 பேர் கைது

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது பிலால். இவர் தனது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பியை மாற்றி அமைக்க வேண்டி மனு செய்து இருந்தார். மேலும் அதற்கான கட்டணம் ரூ.42 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி விட்டு தேவிபட்டினம் மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபு என்பவரை சந்தித்து கடந்த ஒரு மாதமாகவே முறையிட்டு வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக நேற்று வணிக ஆய்வாளரை சந்தித்து மனு சம்பந்தமாக கேட்டபோது உங்க வேலை சீக்கிரம் நடக்க வேண்டுமானால் உதவி பொறியாளருக்கு ரூ.3 ஆயிரமும், ஊழியர்களுக்கு கொடுக்க ரூ.6 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முகமது பிலால் இன்று காலை மீண்டும் வணிக ஆய்வாளரை சந்தித்தபோது ரூ.9 ஆயிரம் பணத்தை கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கறாராக கூறியுள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுத்தலின்பேரில் ரசாயணம் தடவிய ரூ.9 ஆயிரத்தை வணிக ஆய்வாளர் ரமேஷ் பாபுவிடம் இன்று காலை முகமது பிலால் கொடுத்தார். அப்போது அதில் ரூ.3 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மீதி பணம் ரூ.6 ஆயிரத்தை அங்கு பணிபுரியும் வயர் மேன் கந்தசாமி என்பவரிடம் கொடுக்க சொல்லியுள்ளார்.

    அதன்படி இருவரும் ரசாயணம் தடவிய பணத்தை பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் அலுவலக உதவி மின் பொறியாளர் செல்வி என்பவருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×