search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர்- புகைப்படத்தை வெளியிட்டு போலீஸ் தேடுதல்
    X

    துப்புரவு தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர்- புகைப்படத்தை வெளியிட்டு போலீஸ் தேடுதல்

    • கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 32), துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த மாதம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கோட்டார் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோட்டார் போலீசார் பால்ராஜ் குடிபோதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பால்ராஜின் உடல் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    கோட்டார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று பால்ராஜிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது அந்த வாலிபர் பால்ராஜை தாக்கியதும் தெரியவந்துள்ளது.

    மேலும் நள்ளிரவு மீண்டும் பால்ராஜை அவர் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த வாலிபரின் முகம் பதிவாகியுள்ளது.

    ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. கொலையாளியின் புகைப்படத்தை கோட்டார் போலீசார் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டார் போலீசார் மற்றும் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டுமே 4 வழக்குகள் தற்கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் டிரைவர் ஒருவர் பிணமாக கிடந்ததை வடசேரி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்கமாக மாற்றப்பட்டது. இதேபோல் கோட்டார் பகுதியில் கோவில் விழாவில் மது அருந்தி ஒருவர் பலியான சம்பவம் தற்கொலை வழக்கிலிருந்து கொலை வழக்கமாக மாற்றப்பட்டது.

    இதுபோல் மாவட்டத்தில் வேறு 2 வழக்குகளும் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×