என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது.
    • தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நேற்று மாலை திடீரென நுழைந்தது. இதை பார்த்ததும் மாணவ- மாணவிகள் அச்சம் அடைந்தனர். உடனே பள்ளி நிர்வாகம் மாணவிகளை உடனடியாக பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    அதற்குள் அந்த சிறுத்தை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது ஒரு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தை மரங்கள் அடர்ந்த பகுதியில் புகுந்து மறைந்துள்ளது. சிறுத்தை மறைந்துள்ள பகுதியில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.

    கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    இதை தொடர்ந்து, மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட சிறுத்தையானது பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. கூண்டை திறந்தவுடன் சிறுத்தையான சீறி பாய்ந்து வனப்பகுதியில் ஓடியது.

    • திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.
    • ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர்.

    திருச்சி:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் இஸ்லாமியர்கள் உறவினர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆடுகள் குர்பானி கொடுத்து தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பண்டிகைக்கு அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருச்சி சமயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை இன்று களை கட்டியது. இங்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர்.

    அதேபோன்று திருச்சி மட்டுமல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி வழக்கத்துக்கு மாறாக வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிக அளவில் காணப்பட்டது.

    100-க்கும் மேற்பட்ட டெம்போக்களில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சந்தை நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று காலை 9 மணி வரை நடந்தது. இதில் ரூ. 2½ கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வழக்கமாக இந்த சந்தையில் நாளொன்றுக்கு ரூ.1 கோடி முதல் 1½ கோடி வரை வியாபாரம் நடைபெறும். நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதால் இன்று ரூ.1 கோடி அளவுக்கு கூடுதல் விற்பனை நடந்துள்ளது.

    ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என விவசாயிகள் கூறினர். பொதுவாக ஒரு ஆடு ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும்.

    இன்று நடைபெற்ற சந்தையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ 22 ஆயிரம் வரை அதிகபட்சமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் செம்மறி ஆடுகளுக்கு அதிக கிராக்கி இருந்தது. இன்று நடைபெற்ற சந்தையில் 5 ஆயிரத்து 500 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

    • கடல் தண்ணீர் உள்புகுந்ததால் படகு மூழ்க தொடங்கியது.
    • நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மண்டபம்:

    தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

    மண்டபத்தை சேர்ந்த சுதர்சன் என்பவரது படகில் பாம்பனை சேர்ந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, கலீல் ரகுமான், ஆரோக்கியம், பிரசாத், மண்டபம் முகமது அனீபா ஆகிய 5 பேர் கட லுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மண்டபத்தில் இருந்து சில மைல் தொலைவில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றால் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் விசைப்படகு கட்டுப்பாடின்றி தள்ளாடியது.

    தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக விசைப்படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தண்ணீரை வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து கடல் தண்ணீர் உள்புகுந்ததால் படகு மூழ்க தொடங்கியது.

    செய்வதறியாது தவித்த மீனவர்கள் கடலில் குதித்தனர். இதில் பிரசாத், முகமது அனீபா ஆகியோர் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி உயிர் தப்பினர். ஆனால் மற்ற மீனவர்களான பரக்கத்துல்லா, கலீல்ரகுமான், ஆரோக்கியம் ஆகியோர் கடல் சீற்றத்தால் மாயமானார்கள். அவர்களை பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கரைக்கு அவசரமாக திரும்பிய மீனவர்கள் படகு மூழ்கி மீனவர்கள் மாயமானது தொடர்பாக கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் சம்பவம் நடந்த நடுக்கடலுக்கு சென்று 3 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தடை காலம் முடிந்து முதல் நாளிலேயே விசைப்படகு மூழ்கி மீனவர்கள் மாயமானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின்கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை.

    • சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
    • மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கோவை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) தலைவர் சஞ்சய் கும்பட் மற்றும் நிர்வாகிகள் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    டி.என்.பி.எல். 8-வது கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

    லீக் போட்டிகள் ஜூலை 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவையிலும், ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.

    குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ந் தேதி திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

    இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது தமிழ் நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி, இணை செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா உள்பட கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது.
    • யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஈரோடு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களாகவே யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. யானைகள் தோட்டத்துக்குள் புகுவதை தடுக்கும் வகையில் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் காவலில் இருப்பது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்த வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் நம்பியூரைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 25) என்ற வாலிபர் தோட்டத்தில் இரவு நேர காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடப்பட்டிருந்தது. இதனால் இவர் தினமும் இரவில் வந்து இங்கு படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் வெங்கடாசலம் தோட்டத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வெங்கடாசலம் தோட்டத்திற்குள் புகுந்தது. நள்ளிரவு என்பதால் வெங்கடாசலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

    இதனால் யானை வருவதை அவர் கவனிக்கவில்லை. தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடாசலம் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    சத்தம் கேட்டு அருகில் தோட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வெங்கடாசலம் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தோட்டத்தில் யானை நிற்பதையும் பார்த்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், தீபந்தத்தை காட்டியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கும், சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடாசலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அச்சத்துடன் உள்ளனர்.

    • விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் தயாராக நின்ற விசைப்படகுகளில் டீசல் நிரப்பினார்கள். மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களை பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பினர்கள். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

    இன்று ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, கைக்கொழுவை, நெடுவா, கணவாய், திருக்கை, கிளாத்தி, நவரை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பிடித்துக்கொண்டு வரும் உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    இந்த ஆண்டு முதல் வெளியூர் வியாபாரிகளும் நேரடியாக மீன் கொள்முதல் செய்யலாம் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை கட்ட தொடங்கிவிட்டது.

    • ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.
    • ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

    நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

    பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் அடித்து நொறுக்கிய நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    9 பிரிவுகளில் வழக்குப்பதிந்த பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் 13 பேரை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,

    ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம்.

    தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.

    சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது.

    நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாரஇறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவதையே பார்க்க முடிகிறது. இந்நிலையில் வாரஇறுதி நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,640-க்கும் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,705-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 60 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.60-க்கும் கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து பார் வெள்ளி ரூ. 95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.
    • சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது. வெற்றி பெற்ற எம்.பி.க்கள் இன்னும் பதவி ஏற்கவில்லை.

    அதற்குள் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுக் குழுவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உசுப்பி விட்டார்.

    அதை கேட்டதும் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சூடாகி விட்டார்கள். தி.மு.க. தயவால்தான் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அந்த நன்றியை மறந்து விடக்கூடாது என்றார்கள். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

    தி.மு.க. மீது காங்கிரசுக்கு ஏன் இந்த திடீர் ஊடல்? என்பது பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    இதை தி.மு.க.வுடன் ஊடல் என்பதை விட எங்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஊடல் என்பது தான் சரியாக இருக்கும். காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே இருக்கும் மனக்குமுறல்தான் இது.

    2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 96 இடங்களை மட்டுமே பிடித்தது. காங்கிரஸ் 34 இடங்களை பிடித்தது. பெரும்பான்மை இல்லாமல் இருந்தும் காங்கிரஸ் தயவில் தி.மு.க. ஆட்சி நடத்தியது. அப்போதும் ஆட்சியில் பங்கு தரவில்லை.

    இப்போதும் சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் எங்கள் பலத்தையும் சேர்த்துதான் தி.மு.க. வென்றது. இப்போதும் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.

    எந்த மாவட்டத்திலும் எந்த மட்டத்திலும் காங்கிரசாருக்கு உரிய மரியாதையை தி.மு.க.வினர் தரவில்லை.

    ஆட்சியில் பங்கு கேட்காவிட்டாலும் 10 வாாரியங்களில் பொறுப்பு தர கேட்டோம். அதிலும் காங்கிரசாரை கண்டு கொள்ளவில்லை.

    உள்ளாட்சி தேர்தலிலும் சரியான பங்கீடு கிடைக்க வில்லை. கட்சி மேலிடம் முடிவு செய்யாமல் மாவட்ட அளவில் பேசி முடிக்கும்படி கூறி விட்டார்கள். ஆனால் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எங்களை மதிக்கவில்லை. கொடுத்த இடங்களில் கூட போட்டி வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரசாரை தோற்கடித்தார்கள். இப்படி இருந்தால் காங்கிரசை வளர்ப்பது எப்படி?

    கட்சியை இப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் ஒரு கட்டத்தில் காங்கிரசை காண முடியாது. எனவேதான் எம்.பி., எம்.எல்.ஏ. பதவி சிலருக்கு கிடைத்து விட்டதால் கட்சி பலவீனப்பட்டு போவதை தலைவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதுதான் தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாங்கள் 10 வாரியங்கள் கேட்டதில் பீட்டர் அல்போன்சுக்கு மட்டும் தி.மு.க. தன்னிச்சையாக பதவி கொடுத்தது. அறங்காவலர் பதவிகள் கேட்டோம். தரவில்லை. அரசு வக்கீல்கள் பதவி தரவில்லை. வாரிய தலைவர்கள் பதவி விரைவில் முடிய இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலும் விரைவில் வரப்போகிறது.

    தி.மு.க.வால் நாங்களும், எங்களால் தி.மு.க.வும் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அமைச்சர் பதவிகள் எதையும் நாங்கள் கேட்கவில்லை. சின்ன சின்ன பதவிகளை யாவது எங்களுக்கும் கொடுத்தால்தானே நாங்களும் கட்சியை வளர்க்க முடியும் என்றனர்.

    வரப்போகும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும், காலியாக போகும் வாரிய தலைவர்கள் பதவியிலும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் முரண்டு பிடிப்பதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.
    • மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை அருகே உள்ள நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன் (வயது 28).

    இவரும், பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த முருகவேல் மகள் உதய தாட்சாயினி(23) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் பாளை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதனிடையே மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

    இந்த தகவலை அறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் நேற்று மாலையில் மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் சென்ற பெண்ணின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை சூறையாடினர்.

    இந்த தாக்குதலில் அங்கிருந்த வக்கீல் பழனி, அருள்ராஜ் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து உதய தாட்சாயினிக்கு திருமணம் செய்து வைத்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து பெண்ணின் தந்தை முருகவேல்(55), பெண்ணின் அண்ணன் சரவணக்குமார்(27), தாய்மாமாவான புதுப்பேட்டையை சேர்ந்த சங்கர்(35), உறவினர்கள் குரு கணேஷ்(27), மதுரை யோகீஸ்வரன்(23), பெண்ணின் தாய் சரஸ்வதி(49), மார்த்தாண்டத்தை சேர்ந்த சித்தி சுமதி(44), பாட்டி ராஜிலா(75), பெரியம்மா புதுப்பேட்டையை சேர்ந்த அருணாதேவி(51), மதுரை பெரியம்மா வேணி(52), அக்காள்கள் ஸ்டெல்லா(29), சூர்யா(32) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

    மேலும் இந்த பிரச்சனையில் தொடர்புடைய பந்தல் ராஜாவும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது அத்துமீறி கும்பலாக நுழைவது, மிரட்டல், சூறையாடுவது, பெண்களை தவறான வார்த்தையில் பேசியது உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் பெண்ணின் பாட்டி ராஜிலா வயது மூப்பின் காரணமாகவும், பெண்ணின் அக்கா சூர்யா கைக்குழந்தையுடன் இருப்பதன் காரணமாகவும் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்ற 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது.
    • போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் முத்துசாமி வரவேற்கிறார்.

     இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இதில் பங்கேற்க வருபவர்கள் அமர வசதியாக இருக்கைகளும் போடப்பட்டு உள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது. அவர்கள் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் போலீசார் விழா நடைபெறும் மைதானத்தில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்துக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார். இதன் காரணமாக கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர்.
    • கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி மிகவும் பரபரப்பு நிறைந்தது ஆகும்.

    நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஜெயராமன் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து உள்ளனர்.

    அவர்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பரபரப்பான நகர பகுதியில் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருக்காது, அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என்றனர். ஆனால் அவர்களின் கணிப்பு தவறு என்பதை போன்று அங்கு ஒரு சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிறுத்தை வனத்துறையினரிடம் இருந்து தப்பி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து சென்றது. அப்போது அங்கு பள்ளி சுற்றுச்சுவருக்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புத்தகரத்தை சேர்ந்த கோபால் (வயது 55) என்பவரை நெற்றி, காது பகுதியில் சிறுத்தை தாக்கிவிட்டு மறைவான இடத்தில் புகுந்தது.

    சிறுத்தை தாக்கியதை அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டு பள்ளிக்குள் சிறுத்தை புகுந்து விட்டது, குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் தொற்றியது.

    பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்து மாணவிகளை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டி பாதுகாத்தனர். சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த கோபாலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    சிறுத்தை பள்ளி வளாகத்தில் இருப்பதால் மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம், கதவுகளை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அருகில் இருந்த பள்ளிகளிலும் எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல் தெரிவித்தனர். சிறுத்தை புகுந்த தகவல் திருப்பத்தூர் நகர பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் தங்கள் குழந்தைகளின் நிலைமை என்ன ஆனதோ என்ற அச்சத்துடன் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு பதற்றத்துடன் குவிந்தனர்.

    இதையடுத்து அங்கு சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை திடீரென 10 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அருகே உள்ள கார் நிறுத்தும் பகுதிக்குள் புகுந்தது. சிறுத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய தகவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வகுப்பறை கதவுகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவிகளை பத்திரமாக பெற்றோருடன் அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில பள்ளி குழந்தைகள் பயத்துடன் அழுது கொண்டு ஓடினர். அவர்களுக்கு ஆசிரியர்களும், சக மாணவிகளும் ஆறுதல் கூறினர்.

    சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர். மாலை 5.30 மணிக்கு அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது பொதுமக்களும், பெற்றோர்களும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புகுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவிகளை பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

    பின்னர் கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.

    கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

    ×