என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • S.I.R. சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.
    • வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே குழப்பம் உள்ளது.

    சென்னை:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், வாக்காளர் தீவிர திருத்த படிவத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கூறியிருப்பதாவது:-

    * சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல் தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை.

    * அவசர அவசரமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதை தான் எதிர்க்கிறோம்.

    * S.I.R. சதி என்பதை உணர்ந்தே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

    * வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கொடுக்கப்பட்ட படிவங்களிலேயே குழப்பம் உள்ளது.

    * உறவினர்கள் பெயரை தேர்தல் ஆணையம் கேட்கிறது, உறவினர் என்றால் யார்?

    * தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    * ஏதாவது பொய்யை சொல்லி ஏழை, எளிய மக்களின் வாக்குகளை பறிக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாக குற்றம் சாட்டினார். 



    • முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரெயில் சேவை மாறி உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகள் வீட்டின் அருகில் இருந்தே எளிதில் மெட்ரோ நிலையங்களை சென்றடைய வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 220 புதிய மின்சார ஏ.சி.மைக்ரோ பஸ்களை அறிமுகப்படுத்த போவதாக கடந்தமாதம் தெரிவித்து இருந்தது.

    இந்த மைக்ரோ பஸ்கள் மினி பஸ்களை விட அளவில் சிறிதாக இருக்கும். சுமார் 5 முதல் 6 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏ.சி.மைக்ரோ பஸ்கள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 5 கி.மீட்டர் சுற்றளவில் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களை மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் செயல்படும்.

    இது தொடர்பாக கடந்த 3-ந்தேதி மெட்ரோ ரெயில், மாநகர போக்குவரத்து கழகம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பஸ்களை இயக்க உள்ள வழித்தடம், பஸ்கள் இயக்கும் நேரம், சார்ஜிங் இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த மின்சார மைக்ரோபஸ் சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், நங்கநல்லூர், பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை, விம்கோநகர், விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரெயில்நிலைய பகுதியில் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே இந்த பகுதிகளில் 22 மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.அவை 20 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன. புதிய மைக்ரோபஸ்கள் அறிமுகமானதும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும். இது மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மட்டுமே இயக்கப்படும். பயணிகள் தங்களது பகுதியில் இருந்து எளிதாக மெட்ரோ நிலையத்தை அடையலாம். மெட்ரோ ரெயில் இயக்கப்படும் நேரத்திற்கு ஏற்ப இந்த பஸ் சேவை திட்டமிடப்படும், மேலும் பயணிகள் மைக்ரோ பஸ்கள் வரும் நேரத்தை கண்காணித்து "சென்னை ஒன்" செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த மைக்ரோ பஸ் சேவைக்கு பயணிகளிடையே உள்ள வரவேற்பை பொறுத்து மற்ற வழித்தடங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.

    • வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும்.
    • பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    சென்னையை பொறுத்தவரை புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவைகள் பொதுமக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த ரெயில்களை நம்பி நீண்ட தூரத்தில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். சென்னை மக்களின் ஒரு வரப்பிரசாதமாக புறநகர் ரெயில் சேவைகள் இருந்து வருகிறது.

    சென்னையில் தீராத தலைவலியாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பஸ், கார், இருசக்கர வாகனங்களில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியுமா...? என்பது கேள்விக்குறிதான். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நத்தை போலதான் ஊர்ந்து செல்லும். இதில் இருந்து தப்பிக்க ரெயில் சேவைகள் பொதுமக்களுக்கு, பெரிதும் கை கொடுத்து வருகிறது.

    கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை பயன்பாட்டில் இருந்த நிலையில் மற்றொரு புதிய வழித்தடமாக கடற்கரை, வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு பறக்கும் ரெயில் பாதை திட்டம் 1995-ல் உருவாக்கப்பட்டது.

    இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரை ரெயில் இயக்கப்பட்டது.

    சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வேளச்சேரி- பரங்கிமலையை இணைக்கும் வகையில் ரூ.730 கோடி செலவில் கடந்த 2008-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைப்பதில் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக தலையிட்டதால் தீர்வு ஏற்பட்டது. இதனால் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததால் மீண்டும் பணிகள் முடங்கியது.

    பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பு பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ளகரம், ஆதம்பாக்கம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது.

    தண்டவாளம் அமைக்கும் பணிகள் நூறு சதவீதம் நிறைவடைந்ததால் ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) அல்லது ஜனவரிக்குள் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இணைப்பின் மூலம் பரங்கிமலை ரெயில் நிலையம் பெரிய சந்திப்பாக மாறி இருக்கிறது.

    பறக்கும் ரெயில், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகிய 3 ரெயில் சேவைகளும் சந்திக்கும் மிகப்பெரிய ரெயில்வே முனையமாக பரங்கிமலை மாறி உள்ளது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும். இதில் ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் பாதைக்கு மேலே மேம்பாலத்தின் மீது மெட்ரோ ரெயில் செல்லும். பரங்கிமலை வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் வழியாக செல்லும்.

    வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் வந்து செல்லும் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தின் 2-ம் தளத்தில் பயணச்சீட்டு வழங்குமிடம், அலுவலக அறைகள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன.

    மெட்ரோ ரெயில் நிலையத்தின் தரை தளத்தில் இருந்து பறக்கும் ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பரங்கிமலை மின்சார ரெயில் நிலையம் ஆகியவற்றுக்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் படிக்கட்டுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில் சேவைகளும் பரங்கிமலையில் செயல்பட தொடங்கியதும் பரங்கிமலையின் முகமே மாறி இருக்கும்.

    வேளச்சேரி- பரங்கிமலை வழித்தடத்தில் ஒரு ரெயில் என்ஜீன் மற்றும் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு தண்டவாளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை அறிய சோதனை நடத்தப்பட்டது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தி ரெயிலின் இயக்கம், பிரேக் சிஸ்டம், மின் இணைப்புகள், சிக்னல் இணைப்புகள், ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.

    இந்த சோதனை ஓட்டம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் ரெயில்களை இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிப்பார். அதன்பிறகு ரெயில்கள் வேளச்சேரி-பரங்கிமலை இடையே இயக்கப்பட இருக்கிறது.



    இதன் மூலம் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்களின் கனவு நிறைவேற இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் சென்னையின் பிறபகுதிகளுக்கு இனி விரைவாக பயணிக்க முடியும்.

    சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிக்கு செல்வது புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயணம் இனி எளிதாகி விடும்.

    குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பறக்கும் ரெயில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் போக்குவரதது நெரிசலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

    பரங்கிமலை ரெயில் நிலையம் சமீபத்தில் தான் நவீன மயமாக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. தற்போது பறக்கும் ரெயில் நிலையமும் செயல்பட இருப்பதால் பரங்கிமலையின் முகமே மாறிவிடும். தாம்பரம் போல மிகமிக, முக்கியமான ரெயில் நிலையமாக உருவெடுக்கும். இங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

    பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயில் சேவை, மெட்ரோ ரெயில் சேவை, பறக்கும் ரெயில் சேவை, மாநகர பஸ் சேவைகள் ஒரே இடத்தில் கிடைப்பதாலும் இங்கிருந்து வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு மிகவும் எளிதாக செல்லலாம் என்பதாலும் எப்போது பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.  

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.
    • தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    சென்னை:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகள் இதில் அடங்கும்.

    தமிழகம் முழுவதும் 45 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை வாலிபர்கள் பலர் ஆர்வமுடன் எழுதினார்கள். இதற்கான கல்வி தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டதாரி இளைஞர்களும் என்ஜினியர்களும் தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    சென்னையில் 10 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. 9, 915 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 9000 மேற்பட்டோர் இந்த தேர்வு எழுதினார்கள். இதையொட்டி தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரையில் பெறப்பட்டது.

    எழுத்து தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கே உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை குற்றப்பிரிவு காவல் துறை தலைவர் செல்விகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கங்காதரன், தமிழரசு ஆகியோர் சென்று கண்காணித்தனர்.

    • பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
    • காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகரில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்க ளில் விட்டுவிடுகிறார்கள்.

    இது போன்ற வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களிடம் இருந்து விலகியே இருக்கும். அந்த நாய்களோடு ஒன்றோடு ஒன்று கலக்காது.

    இப்படி கைவிடப்படும் வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர்கிறது.

    வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.

    இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். மைக்ரோசிப் பொருத்தும்போது கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    வருகிற 24-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் நாய்களை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

    செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம்களை நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்டு சென்னையில் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சென்னை மாநகர சாலைகளில் ஆதரவின்றி சுற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தான் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.
    • மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தியாகதுருகம்:

    கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் அரவிந்தன் (27) கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று இரவு தியாகதுருகம் பல்லகச்சேரி சாலையில் உள்ள தனது கார் உரிமையாளருக்கு சொந்தமான வாட்டர் சர்வீசில் காரை கழுவ சென்றார். அப்போது இவர் மின் மோட்டாரை நிறுத்திய போது அவரை மின்சாரம் தாக்கியதில் துடிதுடித்துள்ளார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாட்டர் சர்வீசில் வேலை பார்த்து வந்த தியாகதுருகம் கரிம்ஷா தக்கா பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அகமது மகன் ஷாகில் (18) அரவிந்தனை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அருகில் இருந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்தன் மற்றும் ஷாகில் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் கலிபுல்லா மகன் ஷாஜன் (30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர்கள் 2 பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.
    • நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

    பூத் வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமித்து அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். வீடு வீடாக வாக்காளர் பட்டியலை சரி பார்த்து யார் யாருக்கு ஓட்டுகள் விடுபட்டுள்ளது. வீட்டு முகவரி மாறியவர்கள் யார் யார்? என்ற பட்டியலை சேகரித்து அவர்களது ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதால், அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    அது மட்டுமின்றி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை கண்டித்து வருகிற 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கட்சிப் பணிகள் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்காக இன்னும் வேகமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களை கேட்டுக்கொண்டார்.

    அது மட்டுமின்றி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்தும் விரிவாக பேசினார்.

    சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஒன்றிய அரசின் கைப்பாவையாக எதேச்சதிகார போக்குடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாகவும், கூறினார்.

    சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு பிறகு நடத்தலாம் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் அதை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை.

    சிறுபான்மையினர் வாக்குகள் பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித் திட்டம் நடைபெறாமல் இருக்க அனைவரும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தேர்தலுக்காக ஆரம்ப கட்ட பணிகள் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து முடித்திட வேண்டும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இது தவிர கட்சி பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்களுடன் விரிவாக ஆலோசித்தார்.

    இந்த ஆலோசனையில் மாவட்ட கழக செயலாளர்களுடன் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் உடன் இருந்தனர்.

    • ஜெயலலிதா தனது நகை, பொருட்களை வழங்கி கட்சியை வலிமைப்படுத்தினார்.
    • அதிமுகவில் இருந்து பலர் நன்றி மறந்து சென்றுவிட்டனர்.

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. என்ற இயக்கம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களால் வளர்த்த இயக்கமாகும். பல்வேறு தியாகங்கள் செய்து தான் அவர்கள் இந்த இயக்கத்தை வளர்த்தனர். பல பேர் நன்றி மறந்து சென்றுவிட்டனர்.

    ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். 1989-ம் ஆண்டு தனது நகை, பொருட்களை வழங்கி கட்சியை வலிமைப்படுத்தினார். உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது. ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். தொண்டர்களை காக்க என்ன செய்ய வேண்டுமோ அந்த பணியை அவர் செய்து வந்தார்.

    விரைவில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் நான் 45 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். நான் இளவரசர் போல இல்லை. எளிமையாக தான் இருந்து வருகிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    • அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    கூடலூர்:

    கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இங்கு பாசனத்திற்கு போக வைகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    பருவமழை தொடங்கிய போது கடந்த அக்.17ம் தேதி கனமழை பெய்தது. இதனால் 132 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 138 அடியை எட்டியது.

    உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்ற போதும் ரூல்கர்வ் விதிமுறைப்படி 18ம் தேதி கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.

    மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. இருந்த போதும் ரூல்கர்வ் முறைப்படி கேரள பகுதிக்கு 9 நாட்களுக்கு வீணாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததாலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

    எனவே ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவுக்கு எந்த பயனுமின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அந்த தண்ணீரை தேக்கி வைத்திருந்தால் தற்போது பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

    கடந்த வாரம் 137.65 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 135.20 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 1820 கனஅடியில் இருந்து 1780 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.49 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் கால்வாய் பாசனத்திற்கு என மொத்தம் 2049 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1597 கனஅடி நீர் வருகிறது. 5442 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    • கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும்.
    • 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

    கிளிமஞ்சாரோ சிகரமானது தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலையாகும்.

    இது ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் அனைத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கிறது. இயற்கை எழிலுடன் கூடிய இந்த சிகரத்தை தொடுவது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. பல கோடி செலவில் தயாரிக்கப்படும் ஒரு சில திரைப்படங்களிலும் இங்கு காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

    இந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன.

    இதில், கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலையாக உள்ளது. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை.

    ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும். இந்த கிளிமஞ்சாரோ மலைமீது ஏற பல்வேறு மலைவழிகள் உள்ளன.

    அதில் "மச்சாமே" என்பது சிறந்த பாதையாக கண்டறியப்பட்டுள்ளது. கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இதுபற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். இதில் ஏறுவது எளிமையானதாக கருதப்பட்டாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் கடினத்துடன், ஆபத்தானதாகவும் உள்ளது.

    மலையேறும் அனைவருமே மூச்சுவிடக் கடினம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" என்று அழைக்கப்படும் கொடுமுடியை அடைகிறார்கள்.

    குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.

    இந்தநிலையில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உள்பட 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

    அதுபற்றிய விபரம் வருமாறு:-

    தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ் செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் (5,895 மீ.) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளனர்.

    இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (வயது 5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல் (32), காங்கயத்தை சேர்ந்த 40 வயதான அமர்நாத் ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர்.

    மேலும், தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4,720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.

    உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு படைத்துள்ளார்.

    அதேபோல் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகை மாவட்டம் வாழைக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 37). இவர் நாகை அடுத்த திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 ஆண் மகன் உள்ளார்.

    கடந்த ஆண்டு எட்டுக்குடி ஊராட்சி வல்லம் வருவாய் வி.ஏ.ஓ.வாக ராஜாராமன் பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இருந்தாலும் சில மாதங்கள் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு திருவாய்மூர் வி.ஏ.ஓ.வாக பணியை தொடர்ந்தார்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ராஜாராமன் தனது மோட்டார் சைக்கிளில் நாகைக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து மாலையில் மோட்டார் சைக்கிளில் வாழைக்கரையில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் ராஜாராமனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை நாகை செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் முகம், தலையில் பலத்த காயங்களுடன் ராஜாராமன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அன்று இரவில் ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்த மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

    இதில், ராஜாராமன் செல்லூரில் போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.

    சென்னை:

    சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள் என்ன? என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

    இந்த படிவங்களை நிரப்புவதற்கு வசதியாக 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் தேடல் வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அதை காணலாம். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.

    இந்த கணக்கீட்டு படிவம் குறித்த சந்தேகங்கள் எழுந்தால் வாக்காளர் உதவி நம்பரான 1950 மற்றும் வாட்ஸ்அப் குறைதீர் நம்பரான 9444123456 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் எழும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.

    இதற்காக ECINET செயலி அல்லது https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, book a call with BLO என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, செல்போன் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.

    கடந்த தீவிர திருத்த பட்டியல்களில் பெயர் இருந்தால், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களான, வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினரின் பெயர், உறவு (முறை), மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், எண், பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

    கணக்கீட்டு படிவத்தில் ஏற்கனவே சில விவரங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். அதில் புகைப்படமும் இருக்கும். அதில் கூடுதலாக, பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பம்), செல்போன் எண், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் அல்லது மனைவியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்) அவற்றை வாக்காளர் குறிப்பிட வேண்டும்.

    இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

    ×