என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும், அறம் வளர்த்தநாயகியும், விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.
பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும், அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, சுவாமி பத்மேந்திரா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேரோட்ட விழாவில் புதுமண தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தோடு வந்து தேரோட்ட விழாவில் பலரும் கலந்து கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோரும் தேரோட்ட விழாவில் பங்கேற்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர். சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் திருவிழாவான நாளை (13-ந்தேதி) காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும், இரவில் ஆராட்டும் நடக்கிறது.
- பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
- மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னை:
அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கடந்த 9-ந் தேதி சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை-11 நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாய விலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆயிரம் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சித்சபையில் விஷேக ரகசிய பூஜை.
- 14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்
இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 5-ந் தேதி வெள்ளி சந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடந்தது.
9-ந் தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந் தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந் தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கீழ ரத வீதியில் இருந்து தொடங்கி தெற்கு ரத வீதி, மேல வீதி, வடக்கு ரத வீதி வழியாக மாலை 4 மணியளவில் நிலையை வந்தடைகிறது.
நாளை ( 13-ந் தேதி)அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்ச வத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- சுயேச்சை வேட்பாளர்கள் சின்னங்களை தேர்வுசெய்து வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி இடைத்தே ர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நட க்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்த னர்.
வேட்புமனு தாக்கல் செய்துள்ள 3 பேரும் ஈரோடு அல்லாத வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். ஈரோடு மாவட்டம் அல்லது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இடைத்தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். சுயேச்சையாக போட்டியிடு பவர்களுக்காக தேர்தல் ஆணையம் 135 சின்னங்கள் ஒதுக்கி உள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் அந்த பட்டியலை பார்த்து விரும்பும் 3 சின்னங்களை தேர்வுசெய்து வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.
இதில் ஏதாவது ஒரு சின்னம் ஒதுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சின்னம் கேட்டு இரு ந்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- திருமண மண்டபங்களில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- பதவிக்கு ஏற்ப பொங்கல் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் நிலையில், தி.மு.க.வினர் மிக எழுச்சியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கு புத்தாடைகள், கரும்புகள், பொங்கல் பொருட்கள், பாத்திரங்கள், ரொக்கப்பணம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது.
கழக செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்கள். ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதுதவிர கட்சித் தலைமையில் இருந்தும் நிர்வாகிகளுக்கு பெரிய அளவில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், பகுதி கழக வட்டக் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பி.எல்.ஏ.-2 பாக முகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பதவிக்கு ஏற்ப பொங்கல் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், கட்சி தலைமையில் இருந்து தீபாவளிக்கு பணம் தந்தது போல் இப்போது பொங்கலுக்கும் தந்துள்ளனர்.
மாவட்ட செயலாளர் களுக்கு ரூ.10 லட்சம், எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம், மாநகர செயலாளர்களுக்கு ரூ.3 லட்சம், பகுதி செயலாளர்களுக்கு ரூ.1½ லட்சம், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம், கவுன்சிலர்கள், வட்டச் செயலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம், வட்ட பொறுப்பில் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பதவிக்கேற்ப பொங்கல் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,200 கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளி த்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இந்த நிலையில் டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் தண்ணீர் திறப்பு படிபடியாக குறைக்கப்பட்டு வந்தது. இன்று காலை டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 745 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 674 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டாவுக்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 85.76 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- வாக்குப்பதிவுக்கு 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
- முதல் கட்ட சரிபார்ப்பு பணி நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.
ஈரோடு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 237 வாக்குச்சாவடி மையங்களில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவுக்கு 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணி பெங்களூரு பெல் நிறுவனத்தின் மூலம் கடந்த 6-ந்தேதி முதல் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடைபெற்று வந்தது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி முடிவுற்ற பின்னர், இந்திய தேர்தல் ஆணையம் 5 சதவீதம் மாதிரி வாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்ட சரிபார்ப்பு பணி நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இந்த பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், 19 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயிற்சி நடத்துவதற்காக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்த ஆய்வின்போது, ஈரோடு ஆர்.டி.ஓ.ரவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முஹம்மது குதுரத்துல்லா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
- ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று டெர்பி பந்தயம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
- வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த பந்தயத்தில் குதிரைகள் கலந்து கொள்கிறது.
சென்னை:
கிண்டியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பொங்கல் அன்று 'டெர்பி' பந்தயம் நடக்கிறது.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று டெர்பி பந்தயம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் மொத்தம் 9 குதிரைகள் கலந்து கொள்கின்றன. வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த பந்தயத்தில் குதிரைகள் கலந்து கொள்கிறது.
டெர்பி பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.70 லட்சத்து 35 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது வரும் குதிரை யின் உரிமையாளருக்கு ரூ.27 லட்சமும், 3-வது வரும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.11½ லட்சமும், 4-வது வரும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.6 லட்சமும் வழங்கப்படும்.
இரண்டு நாட்கள் நடைபெறும் முக்கிய பந்தயங்கள்:-
1. டாஷ்மெஷ் ஸ்டெட் மில்லியன் ரூ.14½ லட்சம், 2. நனோலி ஸ்டெட் பில்லிஸ் கோப்பை ரூ.16½ லட்சம், 3. சென்னை ரேஸ் கிளப் கோப்பை ரூ.22 லட்சம். 4. பொங்கல் மில்லியன் கோப்பை ரூ.10½ லட்சம், 5. எம்.ஏ.எம்.ராமசாமி நினைவு கோப்பை ரூ.18 லட்சம். 6. உஷா ஸ்டெட் மில்லியன் கோப்பை ரூ.14½ லட்சம்.
இரண்டு நாட்கள் நடைபெறும் பந்தயத்தில் 14 ரேஸ்கள் நடைபெறுகிறது. எச் பி எஸ் எல் என்ற நிறுவனம் டெர்பி பந்தயத்திற்கு ஸ்பான்சர் செய்கிறது. இதன் உரிமையாளர் பிருத்வி ராஜி டெர்பி பந்தயத்தில் ஜெயிக்கும் உரிமையாளருக்கு கோப்பையை பரிசாக வழங்குவார்.
இந்த தகவலை ரேஸ் கிளப் செயலாளர் நிர்மல் பிரசாத் தெரிவித்தார். உடன் சீனியர் ஸ்டைபென்டிரி ஸ்டூவார்ட் வின்சன்ட் தன்ராஜ், உதவி ஸ்டைபென்டிரி ஸ்டுவார்ட் ஆர்.என்.வி.பி. குமார் உடன் இருந்தனர்.
- யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர்.
- யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் 56 வயதுடைய காந்திமதி என்ற பெண் யானை உள்ளது.
வயது முதிர்வு காரணமாக இந்த யானைக்கு கால்களில் மூட்டு வலி ஏற்பட்டு நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக யானை கீழே படுத்து உறங்காமல் நின்றபடியே தூங்கிக் கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் யானை திடீரென்று கீழே படுத்தது. ஆனால் அதன் பிறகு அதனால் எழுந்திருக்க முடியவில்லை.
யானையை மீண்டும் எழுந்து நிற்க வைக்க பாகன்கள் முயற்சி செய்தனர். ஆனால் அது கைகொடுக்கவில்லை. இதுகுறித்து பாகன்கள் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நெல்லை ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனை தலைமை டாக்டர் முருகன், நெல்லை வனகால்நடை டாக்டர் மனோகரன், மதுரை வனகால்நடை டாக்டர் கலைவாணன், நெல்லை ராமையன்பட்டி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் செல்வமணிகண்டன், நெல்லை வனச்சரகர் சரவணகுமார் ஆகியோர் உடனடியாக கோவிலுக்கு வந்து யானையை பார்வையிட்டனர். இந்த மருத்துவ குழுவினர் யானையின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மாலையில் 2 பெரிய கிரேன்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த கிரேன்கள் மூலம் யானையின் உடலில் பெல்ட் கட்டி தூக்கி நிறுத்தினார்கள்.
சிறிது நேரம் நின்றிருந்த யானை மீண்டும் கீழே படுத்துக்கொண்டது. யானைக்கு தொடர்ந்து மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழந்தது.
யானையை எழ வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை உயிரிழந்தது.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 7,309 பஸ்கள் புறப்பட்டு சென்றுள்ளன.
- ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மூலமாகவும் 3.5 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர்.
சென்னை:
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பஸ்-ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, நேற்று முன்தினம் முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் 7,309 பஸ்கள் புறப்பட்டு சென்றுள்ளன. இந்த பஸ்கள் மூலம் சுமார் 5 லட்சம் பேர் சாலை மார்க்கமாக வெளியூர்களுக்கு பயணித்துள்ளனர்.
சுமார் 200 ரெயில்களில் கடந்த 2 நாட்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணித்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட விமானங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலானோர் சென்றுள்ளனர். அதேபோல ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மூலமாகவும் 3.5 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் புறப்பட்டு சென்றுள்ளன. அந்தவகையில் கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இன்றும், நாளையும் 4,184 தினசரி பஸ்களுடன், 2,611 சிறப்பு பஸ்கள் என 6,175 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல வெளியூர்களில் இருந்து சென்னைக்கு 4,390 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வழக்கத்தை காட்டிலும் இந்தாண்டு வெளியூர் சென்ற கார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் உட்கார கூட இடமின்றி கூட்டம் காணப்படுகிறது. ஒவ்வொரு ரெயிலிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.






