என் மலர்tooltip icon

    ராஜஸ்தான்

    • கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.
    • ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது.

    ராஜஸ்தானில் தலித் தலைவர் வந்து சென்றபின் கங்கை நீரை தெளித்து கோவிலை சுத்தப்படுத்திய பாஜக மூத்த தலைவர் ஞான் தேவ் அஹுஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கடந்த வாரம் ராம நவமி தினத்தன்று, ஆல்வாரில் உள்ள ஒரு ராமர் கோவிலில் பிராண-பிரதிஷ்ட விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திகா ராம் ஜூலியும் பங்கேற்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞான்தேவ் அஹுஜா மறுநாள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ராமர் இருப்பதை மறுப்பவர்களின் வருகையால் கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.

    இதற்குப் பிறகு, ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது. இதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

    "இது எனது தனிப்பட்ட நம்பிக்கை மீதான தாக்குதல் மட்டுமல்ல, தீண்டாமை என்ற மனிதாபிமானமற்ற மனநிலையை ஊக்குவிக்கும் செயல். அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் நேரடி அவமதிப்பாகும்" என்று திகா ராம் ஜூலி தெரிவித்தார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தனது எக்ஸ் பக்கத்தில், '21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாகரிக சமூகத்தில் இத்தகைய குறுகிய மனப்பான்மை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சிந்தனையுடன் உடன்படுகிறதா என்று பாஜக பதிலளிக்க வேண்டும்?" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் சர்ச்சை வலுத்ததால் ஞான்தேவ் அஹுஜாவை பாஜக கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஞான்தேவ் அஹுஜா தனது செயலுக்கு மூன்று நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
    • இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

    ஜெய்ப்பூரில் நகர்கர்க் பகுதியில் உள்ள பரபரப்பான தெருவில் நேற்று மாலை சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

    அங்கிருந்த மக்கள் காரை துரத்திச் சென்று பிடித்ததில் கார் ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆனால் படுகாயமடைந்தவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குடிபோதையில் கார் ஓட்டிய நபரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி உஸ்மான் கான் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாவட்ட தலைமை உத்தரவிட்டுள்ளது. 

    • வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இதையடுத்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானின் பீவார் மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கரில் இருந்து நேற்று நச்சு வாயு கசிந்தது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலை உரிமையாளர் சுனில் சிங்கால் (47) நேற்று இரவும்,தயாராம் (52), நரேந்திர சோலங்கி ஆகியோர் இன்றும் இறந்தனர்.

    பாடியா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக இயக்கப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நைட்ரிக் அமிலக் கசிவு காரணமாக நேற்று இரவு 53 பேர் நோய்வாய்ப்பட்டனர். வாயுவை சுவாசித்த பின் அருகிலுள்ள பலர் நோய்வாய்ப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    சுவாசப் பிரச்சனை மற்றும் வாந்தி போன்ற புகார்களைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆபத்தான நிலையில் உள்ள 2 பேர் அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வாயுக்கசிவைத் தொடர்ந்து, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவை அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
    • வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு வணிக நிர்வாகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய தேர்வு தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வணிக நிர்வாகத் தேர்வு வினாத்தாள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு இந்தாண்டு நடைபெற்ற தேர்விலும் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் பள்ளி கல்வி வாரியம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
    • கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.

    ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

    கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

    கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார்.
    • ஒட்டகத்தை துன்புறுத்திய செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகத்தை துன்புறுத்தி அதன் மீது ஏறி ஒரு இளம்பெண் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனுமன் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

    அதில், வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தெருவில் ஒரு கயிற்று கட்டில் உள்ளது. அதன் மீது ஒட்டகத்தை படுக்க வைத்து, அதன் இரு கால்களையும் கட்டி உள்ளனர். பின்னர் அந்த ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார். பொழுதுபோக்கிற்காக இவ்வாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ஒட்டகத்தை துன்புறுத்திய இந்த செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    • கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
    • ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.

    ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.

    மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
    • பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மகன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    யோகேஷ் குமார் என்ற 18 வயது இளைஞர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

    யோகேஷ் உயிரிழந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவரது தாய் ரேகா (40) மருத்துவமனையின் 2 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரேகா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது.
    • அதை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    ஜெய்ப்பூர்:

    சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது. அதை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    1952, 1957, 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பாராளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

    இந்த முயற்சி தேசிய நலனுக்கானது. தேர்தல் ஆணையம், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு ஆகியவை தங்கள் ஒப்புதலை அளித்தன. அதன்பிறகு அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.

    ஒரே நேரத்தில் தேர்தல்களை முன்மொழியும் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்ற குழுவால் பரிசீலிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பல்வேறு சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    • ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ்.
    • அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.

    நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஹோலி வண்ணம் பூசிக்கொள்ள மறுத்ததால் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ரால்வாஸ் கிராமத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 25 வயது இளைஞர் ஹன்ஸ்ராஜ். கடந்த புதன்கிழமை மாலை இவர் கிராம நூலகத்தில் படித்துகொண்டிருந்தபோது ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் அசோக், பப்லு மற்றும் கலுராம் ஆகிய மூவர் ஹன்ஸ்ராஜ் மீது கலர் பொடி பூச முனைத்துள்ளனர்.

    ஆனால் வண்ணம் பூசிக்கொள்ள ஹன்ஸ்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் உதைத்து, பெல்ட்டால் விளாசியுள்ளனர்.

    இதன் உச்சமாக மூவரில் ஒருவன் ஹன்ஸ்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்தான். பின்னர் மூவரும் தப்பியோடிய நிலையில் ஹன்ஸ்ராஜ் உடலுடன் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மூவரையும் கைது செய்ய வேண்டும் என நெடுஞ்சாலையில் உடலை கிடத்தி அவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

    • இந்த வீடியோவை பகிர்ந்து கடைசியில் பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.
    • அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர்.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த IIFA திரைப்பட விருது விழாவில் அம்மாநில பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் அவரிடம், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்டனர். இதைக் கேட்டதும் முதல்வர் சிரித்துக் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அவர் சொன்னார்.

    இதைப் கேட்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் இந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வழியாக பாஜக உண்மையை ஒப்புக்கொண்டது என விமர்சித்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோட்டாசாரா, மோடி ஒரு தலைவர் அல்ல, ஒரு நடிகர் என்று நாங்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறோம்.

    தாமதமாக இருந்தாலும், பாஜக அரசாங்கத்தின் முதலமைச்சர்கள் கூட மோடி ஒரு நடிகர், மக்கள் தலைவர் அல்ல என்று கூறத் தொடங்கியுள்ளனர். அவர் கேமரா கலைத்திறன், டெலிப்ராம்ப்டர்கள், உடைகள் மற்றும் மலர்ச்சியூட்டும் பேச்சுகளில் நிபுணர் என்று விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    • உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.
    • சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார்

    ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நகராட்சி மன்ற துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்தவர் 27 வயதான சச்சின். கடந்த சனிக்கிழமை அன்று இவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டு முடித்ததும் பில்லுக்கு பணம் கொடுக்க கவுண்டரை நோக்கி சென்றார்.

    ஓட்டல் ஊழியர் அவரிடம் பில்லைக் கொடுத்தார். பில்லைப் பார்த்ததும், சச்சின் தனது பணப்பையிலிருந்து பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில் அவர் திடீரென கவுண்டரில் சரிந்து விழுந்தார்.

    இந்தக் காட்சியைக் கண்டதும், உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அங்கிருந்த ஊழியர்களும் மக்களும் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

    சச்சின் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. சமீப காலங்களாக இளம் தலைமுறையினரிடையே தொடர்ந்து வரும் திடீர் மாரடைப்பு மரணங்கள் சமூக பிரச்சனையாக மாறியுள்ளது. 

    ×