என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளார். #TamilNewYear
    உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இன்று சித்திரை முதல் நாளான தமிழ்ப் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். பொதுமக்களுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    கிரிஷ் இயக்கத்தில் நந்தா - ஈடன் குரைக்கோஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ழகரம் படத்தின் விமர்சனம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse
    தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் காதலிக்கிறார்கள். கருத்து வேறுபாட்டால் சிலகாலம் இவர்கள் பிரிந்து இருக்க, தொல்பொள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா இறந்துவிடுகிறார். 

    இந்த நிலையில், நந்தாவை சந்திக்க வரும் பெரியவர், நந்தாவிடம் அவரது தாத்தாவின் இறப்பு இயற்கையானதில்லை என்றும், மர்ம கும்பல் ஒன்று அவரது தாத்தாவை கொன்றுவிட்டதாகவும் கூறுகிறார். நந்தாவின் தாத்தா தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை அவர் கண்டுபிடித்துவிட்டதாக கூறுகிறார். மேலும் அந்த இடத்திற்கு செல்வதற்கு தேவையான தடயங்கள், வழித்தடங்கள் அவருக்கு மட்டும் தெரியும் என்றும் கூறுகிறார்.



    இதற்கிடையே நந்தாவின் அப்பா, அவரது தாத்தா பரிசாக கொடுத்ததாக ஒரு பொருளை கொடுக்கிறார். அதனை பிரித்துப் பார்க்கும் போது அதில் ஒரு பகடைக்காய் சில குறியீடுகளுடன் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்வதென்று புரியாத நந்தா, தனது நண்பர்களின் துணையோடு அது பற்றிய தகவல்களை சேகரிக்கிறார். மேலும் அந்த புதையல் இருக்கும் இடத்தையும் தேடி வருகிறார்.

    இந்த நிலையில், அந்த புதையலை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நந்தாவின் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மர்ம கும்பல் ஒன்று மிரட்டுகிறது.



    கடைசியில், நந்தா புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? தனது காதலியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.

    நந்தா தனது தாத்தா விட்ட பணியை தொடர வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். ஈடன் குரைக்கோஸ் அழகு பதுமையாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    உணவு தரக்கூடிய பொருள் தான் உலகத்திலேயே பெரிய பொக்கிஷம் என்ற கருவை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியருக்கிறார் கிரிஷ். அத்துடன் தமிழர்களின் தொன்மை, தமிழ் மொழியின் பெருமையை படத்தில் காட்டியிருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் பாராட்டும்படியாக உருவாக்க்கியிருக்கிறார்கள்.

    தரண்குமாரின் பின்னணி இசை படத்திற்கு பலம். பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `ழகரம்' உணவின் முக்கியத்துவம். #Zhagaram #ZhagaramReview #Nandha #EdenKuriakosse

    நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். #JKRithesh
    நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார்.

    சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

    ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2009 மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடந்த 2014-ல் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். 



    இன்று இராமநாதபுரத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய ரித்திஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JKRithesh #RIPJKRithesh

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும் சூர்யாவின் 38-வது படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. #Suriya38 #SooraraiPottru
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், சூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள். 

    சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
     #SudhaKongara

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி ஆகியோர் நாயகியாக நடித்துள்ள காஞ்சனா 3 படத்தின் முன்னோட்டம். #Kanchana3 #RaghavaLawrence
    சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `காஞ்சனா 3'.

    ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடித்திருக்கிறார்கள். சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி, இசை - டூபாடு, பின்னணி இசை - எஸ்.தமன், படத்தொகுப்பு - ரூபன், கலை - ஆர்.ஜனார்த்தன், ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், நடனம் - ராகவா லாரன்ஸ், பாடல்கள் - விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன், 
    தயாரிப்பு மேற்பார்வை - விமல்.ஜி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராகவா லாரன்ஸ்.



    நடிகை ஓவியா அளித்த பேட்டியில், ’எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும்’ என்றார்.

    படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    காஞ்சனா 3 டிரைலர்:

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதுவதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
    மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

    அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் - விக்னேஷ் சிவன் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இவர்களது கூட்டணியில் உருவாகிய பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கடைசியாக அனிருத் இசையில் வெளியான பேட்ட படத்தில் விக்னேஷ் சிவன் வரியில் பாடல்கள் இல்லை என்ற குறை இருந்தது. அது தர்பார் படத்தின் மூலம் நினைவாகலாம்.



    தர்பார் படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் ஒரு பாடல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பை சென்ற விக்னேஷ் சிவன், ரஜினியை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். டி.சந்தானம் கலை பணிகளையும், ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளையும் வடிவமைக்கின்றனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh #VigneshShivn

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் `காப்பான்' படத்தில் இருந்து சிறப்பு விருந்து ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம் `காப்பான்'. சூர்யாவுடன் இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடிக்கிறார்.

    படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆர்யாவும், பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa

    தமிழ், தெலுங்க படங்களில் நடித்து பிரபலமான நடிகை மேக்னா நாயுடு டென்னிஸ் வீரரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். #MeghnaNaidu
    தமிழில் சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் மற்றும் ஜாம்பவான், வீராசாமி, வாடா உள்பட பல படங்களில் நடித்தவர் மேக்னா நாயுடு. தனுசின் குட்டி, கார்த்தியின் சிறுத்தை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

    இந்த நிலையில் மேக்னா நாயுடு, டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “எனது தந்தை டென்னிஸ் பயிற்சியாளர். அவர் மூலம் போர்ச்சுகீசிய டென்னிஸ் வீரர் லூயிஸ் அறிமுகமானார். என்னை விட அவர் பத்து வயது மூத்தவர். சமூக வலைத்தளம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்தது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. கடந்த 2016 டிசம்பர் 25-ந் தேதி நாங்கள் இருவரும் மும்பையில் இந்து முறைப்படி ரகசிய திருமணம் செய்துகொண்டோம்.



    எளிமையாக இந்த திருமணம் நடந்தது. அடுத்த வருடம் கிறிஸ்தவ முறைப்படியும் எங்கள் திருமணம் நடக்கும். தேனிலவு இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமீபத்தில் எனது கணவரிடம் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறேன் என்றேன். இதைத்தொடர்ந்து எங்கள் திருமணத்தை இப்போது எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்.”

    இவ்வாறு மேக்னா நாயுடு கூறினார். #MeghnaNaidu

    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 2019 ஜூலை மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NadigarSangam #Vishal
    தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். தற்போது நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. தரைத்தளத்துடன் மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் உருவாகி உள்ளது. நடிகர் சங்க அலுவலகம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.



    அடுத்து உள் அலங்கார வேலைகள் நடக்க உள்ளன. செலவு ரூ.30 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மீண்டும் நிதி திரட்ட நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழாவை விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜூலை மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்தும் தேதியை முடிவு செய்கிறார்கள். நட்சத்திர கலைவிழாவை எங்கு எப்போது நடத்துவது என்பதையும் அறிவிக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். #NadigarSangam #Vishal

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam
    அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.

    சோழ வம்சம் தலைதூக்கியதற்கு முக்கிய காரணமாக விளங்கிய பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்படுகின்றனர். இந்த பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகி வளர்ந்த நிலையில் இருந்து ராஜராஜ சோழன் முடி சூடுவது வரையிலான கால கட்டத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்று ஆதாரங்களோடு கற்பனையையும் சேர்த்து கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன்.



    60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, சோழ அரசுக்குள் அடங்கிய குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், ராஜராஜ சோழனின் அன்புக்கு பாத்திரமான வீரம் மிக்க ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

    பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். தற்போது பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிப்பதாக கூறப்பட்டது.



    செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. #PonniyinSelvan #Maniratnam

    விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `ஆதித்யா வர்மா' படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. #AdithyaVarma #DhruvVikram
    தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க வர்மா என்ற பெயரில் பாலா தமிழில் இயக்கினார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் படம் திருப்தியாக இல்லை என்றும், முழு படத்தையும் கைவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து படப்பிடிப்பை நடத்தப்போவதாகவும் தயாரிப்பாளர் அறிவித்தார்.

    இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி படம் துருவ் நடிக்க ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் தயாரானது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வாங்காவின் உதவியாளர் கிரிசய்யா இந்த படத்தை இயக்கினார். இந்தியிலும் கபீர்சிங் என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி ரீமேக் செய்யப்பட்டது.


    கபீர் சிங் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆதித்ய வர்மா படம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஆதித்யா வர்மா படத்தை படக்குழுவினர் கைவிட்டு விட்டதாகவும், அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தையே தமிழில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

    இதனை படக்குழு மறுத்துள்ளது. ஆதித்ய வர்மா படத்தை கைவிடவில்லை. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் போர்ச்சுக்கல் செல்கிறார்கள் என்று தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #AdithyaVarma #DhruvVikram #BanitaSandhu

    விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் `வாட்ச்மேன்' படத்தின் விமர்சனம். #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde
    ஜி.வி.பிரகாஷ் ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

    அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்தவர்கள் மிரட்டுகிறார்கள்.



    இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக மர்ம கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

    கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.



    ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகிறார். இந்த படத்தில் நாய்க்கு பயந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுக்கு அதிகளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் வரும் காட்சிகளில் அழுத்தமாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    யோகி பாபு காமெடி ஆங்காங்கு எடுபடுகிறது. சுமன் அனுபவ நடிப்பையும், ராஜ் அர்ஜூன், ரவி பிரகாஷ், சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.



    காமெடி கலந்த த்ரில்லர் கதையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் விஜய். திரைக்கதை ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்ந்தாலும் ஆங்காங்கு தொய்வு இருப்பது போல் தோன்றுகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் ஒருநாள் நடக்கும் சம்பவங்களை வைத்து கதையை நகர்த்துவது என்பது எளிதில்லை. அதனை சிறப்பாக கையாண்டிருக்கிறார் விஜய்.

    ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் `வாட்ச்மேன்' பரபரப்பு. #Watchman #WatchmanReview #GVPrakashKumar #SamyukthaHegde

    ×