என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்' படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், படத்தின் இசை பற்றிய அறிவிப்பை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். #KadaramKondan #ChiyaanVikram
    ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

    இந்த நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக உருவாகி வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் தேதி வெளியாகும் என்றும் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற மே இறுதி அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KadaramKondan #ChiyaanVikram 

    தமிழகத்தில் வளர்ந்து வரும் ஒரு அரசியல் தலைவருக்கும், அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை விடுப்பதாக ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். #RaghavaLawrence
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ராகவா லாரன்ஸ். அத்துடன் சமூக அக்கறையுடன் பல சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மறைமுகமாக சீமானுக்கு லாரன்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    "வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும், அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!

    இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்/

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன். அதை செவ்வனே செய்துவிட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.
    ஆனால், நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்.

    எனக்கும் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே, பிறகு ஏன் இப்படி பேசுகிறார் என்று எனது நண்பர்களிடம் கேட்டேன். அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம் என்றார்கள். அப்போதுதான் இது அரசியல் என்று புரிந்து கொண்டேன்.

    என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய்விட்டீர்கள். ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள்.



    அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் பதிவிடுகிறார்கள். அது எனக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால், மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும், செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள். இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்போது எல்லை மீறுகிறது.

    எனவே, உங்களுடைய அந்த தொண்டர்களை அழைத்து கண்டிப்பாக இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் படி கூறுங்கள். இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எங்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தால், எச்சரிக்கை தான். அந்த எச்சரிக்கை என்னவென்றால், எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ. முன்பு நடனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்திலுமே நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன். அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத் தான் இருக்கிறேன், அதில் ஹீரோவாக்கி என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்.

    இது தேர்தல் நேரம். இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை. தயவுசெய்து எங்களது மன உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
     
    அவரவர் வேலையை, அவரவர் செய்வோம். நீங்களும் வாழுங்கள், வாழவும் விடுங்கள். இல்லை, இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம் என்றால் அதற்கும் நான் தயார். சமாதானமா? சவாலா? முடிவை நீங்களே எடுங்கள்! இவ்வாறு அதில் கூறியிருக்கிறார். #RaghavaLawrence

    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் நேற்று வெளியாகிய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Kaappaan #Suriya #Mohanlal
    சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் `காப்பான்' படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்திருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். டீசரை பார்க்கும் போது படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக வருகிறாரா? அல்லது போராளியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற நதிய தனக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடுற உரிமையை யாருங்க கொடுத்தா?, போராடுறதே தப்புன்னா, போராடுற சூழ்நிலைய உருவாக்குறதும் தப்புதான? உள்ளிட்ட வசனங்கள் தற்போதைய தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது.



    இந்த படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 30-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


    சூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kaappaan #Suriya #MohanLal #Arya #Sayyeshaa

    காப்பான் டீசர்:

    ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐலவ்யூ கூட சொல்லியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். #JhanviKapoor
    ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படம் மூலம் நடிகையானார். மகளின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

    அம்மா இல்லாதது என்றுமே என் மனதில் பாரமாக இருக்கும் என்று ஜான்வி அடிக்கடி கூறி வருகிறார். காதல் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-



    நான் செம்மயாக கடலை போடுவேன். எனக்கு பிறரை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம். அதனால் பேசத் துவங்குவேன். பசங்க தவறாக புரிந்து கொண்டு ப்ரொபோஸ் செய்தால் சாரி பாஸ், வேறு ஆளை பாருங்க என்று கூறிவிட்டு கிளம்பிவிடுவேன். எனக்கு பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்ஸ்டாகிராமில் அவரிடம் ஐ லவ் யூ என்று தெரிவித்துள்ளேன். அதை பார்த்துவிட்டு அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை’ என்று ஜான்வி கூறியுள்ளார்.
    பற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, இப்படத்தில் நடிக்க அவர்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். #Para #ParaAudioLaunch
    ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. 

    வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

    இப்படம் குறித்து இயக்குநர் கீரா பேசும்போது, ‘இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.



    நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, ‘இந்தப்படத்தில் நான் நடிக்க வந்த காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கேரக்டர் உங்களுக்கு என்றார். நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். இந்த இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டவர். இந்தப்படம் அற்புதமான படம். அருமையான பதிவு." என்றார்.
    பற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான் என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார். #PaRanjith #Para
    ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. 

    வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார்.

    இதில் பா.ரஞ்சித் பேசும்போது, ‘இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். 



    புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெறவேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக்கூடாது" என்றார்.
    எனது அப்பா என்பதால் ஓட்டு இல்லை என்று கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். #Kamalhaasan #ShrutiHaasan
    கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார். அவரது மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், “உங்களை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா. மேம்பட்ட எதிர்காலத்துக்காக, சமுதாயத்துக்காக உங்களிடம் ஒரு பார்வை இருக்கிறது.

    அதை உங்கள் முயற்சி, ஆர்வம், உண்மை மூலமாக கண்டுள்ளீர்கள். உங்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த அனைவருக்கும், உங்கள் டார்ச்லைட் மூலம் ஒரு பிரகாசமான எதிர்காலம் வர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த பதிவுக்கு டுவிட்டரில் ஸ்ருதிஹாசனை பின்தொடர்பவர் ஒருவர், “எனது ஓட்டு உங்களுக்குத் தான் எப்படி சொல்லலாம். உறவு என்பதைத் தாண்டி, எந்த வேட்பாளர் சரியானவர் என தேர்வு செய்ய வேண்டும். அது உங்களுடைய அப்பாவாக இருந்தாலும்” என்று கேள்வி எழுப்பினார்.



    அதற்கு ஸ்ருதிஹாசன் பதிலளிக்கும் விதமாக, “சரியாகச் சொல்ல வேண்டுமானால், அவர் எனது அப்பா என்பதால் ஓட்டு இல்லை. அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என்பதாலேயே என் வாக்கு” என்று தெரிவித்துள்ளார்.

    மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடல் அடக்கம் சொந்த ஊரில் இன்று மாலை நடக்கிறது. #JKRitheesh #RIPJKRitheesh
    ராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார்.

    தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து கடந்த சில நாட்களாக வாக்கு சேகரித்த அவர், நேற்று சொந்த ஊரான ராமநாதபுரம் வந்தார். அங்கு அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு திரட்டினார்.

    மதிய உணவுக்கு பிறகு ராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த ரித்தீசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை கேட்டு உறவினர்களும், அ.தி.மு.க.வினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தபோது சிலர் இதய துடிப்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோ‌ஷன், ஹாரிக் ரோ‌ஷன் என்ற மகன்களும், தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    ரித்தீஷ் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு வந்த அவர், இறந்து விட்ட நிலையில் குடும்பத்தினர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர்.

    மரணம் அடைந்த ரித்தீஷ் உடல், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 5 மணிக்கு ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்படுகிறது.

    ரித்தீசின் மறைவுக்கு தென் இந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளன.

    நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் டைரக்ட் செய்த ‘‘கானல் நீர்’’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த ரித்தீஷ் தொடர்ந்து நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு ‘‘எல்.கே.ஜி.’’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.



    தி.மு.க.வில் மு.க. அழகிரியின் ஆதரவாளரான ரித்தீஷ், 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், ஜே.கே.ரித்தீசும் தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைந்தார். தற்போது மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

    நடிகர் சங்கத்தில் விஷால், நாசர், கார்த்திக் ஆகியோர் தலைமையிலான அணிக்கு ஆதரவாக செயல்பட்ட ரித்தீசுக்கு சமீபத்தில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. #JKRitheesh #RIPJKRitheesh
    அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Sindhubaath
    விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘சிந்துபாத்’ என்னும் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

    பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.



    அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை மே 16ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Sindhubaath #VijaySethupathi
    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படத்தின் டிரைலரை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். #Kalavani2Trailer
    கடந்த 2010-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’.  சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.



    இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அரசியல் கலந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    பெண்ணை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக ஷோபனா நடிக்க இருக்கிறார். #Shobana
    மலையாளத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு. இவர் கடந்த 37 ஆண்டுகளில் மலையாள மொழியில் உள்ள அத்தனை முக்கிய கதாநாயகர்களையும் வைத்து சுமார் 60 படங்களை இயக்கியிருக்கிறார்.

    தற்போது அவரது மகன் அனூப் சத்யன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியிருக்கும் அனூப் சத்யன், பெண்ணை மையமாக வைத்து ஒரு முழு நீள படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சுரேஷ்கோபி, ஷோபனா, நஸ்ரியா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.



    2005-ம் ஆண்டு வெளியான ‘மகளுக்கு’ என்ற படத்திற்கு பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷோபனாவும், சுரேஷ்கோபியும் இணையும் படம் இதுவாகும். தற்போது நாடாளுமன்ற தேர்தலில் சுரேஷ்கோபி போட்டியிடுவதால், தேர்தல் முடிந்த பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #MrLocal
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களை ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மே 1ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
    ×