செய்திகள்
கோப்பு படம்

மாலி: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை - பிரெஞ்சு படை அதிரடி

Published On 2020-11-13 13:01 GMT   |   Update On 2020-11-13 13:01 GMT
மாலி நாட்டில் பிரான்ஸ் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
பமாகோ:

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் 2012-ம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன. 

இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு ராணுவம் மட்டுமல்லாமல் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் மாலியில் தங்கள் ராணுவ தளங்களை அமைத்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், அந்நாட்டின் ஷகில் மாகாணத்தில் அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஜிகாதி குழு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தளபதியாக பாஅக் மௌசா என்ற பயங்கரவாதி
செயல்பட்டு வந்தான்.

இந்நிலையில், ஷகில் மாகாணத்தில் பிரான்ஸ் படையினர் இன்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையின் போது அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத அமைப்பின் தளபதி பாஅக் மௌசா கொல்லப்பட்டான். 

பயங்கரவாத அமைப்பு தளபதியின் உயிரிழப்பு ஷகில் மாகாணத்தில் பயங்கரவாத சம்பவங்கள் பெருமளவு குறையலாம் என உள்நாட்டு படைகள் 
தெரிவித்துள்ளன. 
Tags:    

Similar News