செய்திகள்
ஏமனில் அமெரிக்க படைகள் தாக்குதல்- அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலி
ஏமனில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், அல் கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலியானதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க கடற்படை தளத்தை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்திய நிலையில், அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தா அமைப்பை நிறுவியவரும், அல் கொய்தா இயக்கத்தின் துணை தலைவருமான காசிம் அல் ரமி, அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஏமனை களமாக கொண்டு கடந்த 2009-ஆம் ஆண்டு அல்-கொய்தாவின் ஏகியூஏபி என்னும் பிரிவு தொடங்கப்பட்டது. அரேபிய பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான படைகள் உள்பட அனைத்து மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டு இது இயங்கி வந்தது.
காசிம் அல் ரமி, ஏமனில் உள்ள அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படைகள் மீது பல தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏமனில் தனது உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட தாக்குதலில் காசிம் அல் ரமி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டிரம்பும் உறுதி செய்துள்ளார். எனினும், இந்த தாக்குதல் எப்போது நடைபெற்றது, எந்த சூழலில் நடைபெற்றது என்பது பற்றி எந்த தகவலையும் டிரம்ப் கூறவில்லை.