செய்திகள்
தாய்லாந்தில் கிளர்ச்சிப்படைகள் தாக்குதல் -15 பாதுகாவலர்கள் பலி
தாய்லாந்து நாட்டின் எல்லையோர சோதனைச்சாவடியில் கிளர்ச்சிப் படைகள் நடத்திய தாக்குதலில் 15 தன்னார்வல பாதுகாவலர்கள் உயிரிழந்தனர்.
பாங்காங்:
தாய்லாந்து நாட்டில், மலேசியா எல்லைப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் தன்னாட்சி வேண்டும் என அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் அங்கு அரங்கேறி வருகின்றன.
சர்ச்சைக்குரிய அப்பகுதிகளில் தாய்லாந்து ராணுவமும், பொதுமக்களை பாதுகாக்கும் தன்னார்வலர்களும் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டிருப்பது வழக்கம்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் உள்ள யாலா மாகாணத்தில் உள்ள இரு சோதனைச் சாவடிகளில் கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 15 தன்னார்வல பாதுகாவலர்கள் உயிரிழந்தனர்.
‘சோதனைச் சாவடியில் எதிர்பாராத விதமாக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர். மேலும் சோதனைச்சாவடியில் இருந்த எம்-16 மற்றும் சில கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச்சென்றுள்ளனர்.
இதையடுத்து சோதனை சாவடி இருந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், கடந்த 15 ஆண்டுகளில் 7000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.