செய்திகள்
அல்ஜீரியா - இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி
அல்ஜீரியா நாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அல்ஜீயர்ஸ்:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று அல்ஜீரியா. இந்நாட்டில் சோல்கிங் என அழைக்கப்படும் அப்டேரப்ஹா டெர்ராட்ஜீ என்பவர் நடத்தும் ஆடல் மற்றும் பாடலுடன் கூடிய இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.
இந்நிலையில், பாடகர் சோல்கிங்கின் இசை நிகழ்ச்சி ஒன்று தலைநகர் அல்ஜீயர்சில் உள்ள மைதானம் ஒன்றில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வெளியே குவிந்தனர். மைதானத்தின் வாயில் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதும் ரசிகர்கள் அனைவரும் முந்தியடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அப்பொழுது அதிக எண்ணிக்கையில் இருந்த ரசிகர்கள் நிகழ்ச்சி நடைபெறும் மேடையை நோக்கி வேகமாக ஓடினர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.