செய்திகள்
டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் தோல்வி

Published On 2019-07-18 10:30 GMT   |   Update On 2019-07-18 10:30 GMT
அமெரிக்க அதிபர் டிரம்பை குற்ற விசாரணை மூலம் பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் தோல்வி அடைந்தது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்பை குற்ற விசாரணை மூலம் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக, பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அல் கிரீன் என்ற உறுப்பினர் பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களே அதிகம் உள்ள பிரதிநிதிகள் சபையில், இந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

முதலாவதாக வாக்களித்த சபாநாயகர் நான்சி பெலோசி தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தார். இதையடுத்து பிரதிநிதிகள் சபையில் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக 332 வாக்குகளும், ஆதரவாக 95 வாக்குகளும் பதிவானதால் பதவிநீக்கத் தீர்மானம் தோல்வியுற்றது.

இந்திய அமெரிக்கரும் பிரதிநிதிகள் சபை உறுப்பினருமான பிரமீளா ஜெயபாலும் தீர்மானத்துக்கு எதிராகவே வாக்களித்தார். ஆளுங்கட்சியுடன் கருத்து மோதல்கள் இருந்த போதும் ஜனநாயகக் கட்சியினரில் பலர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

கடந்த தீர்மானத்தின் போது 66 வாக்குகளையே தான் முன் மொழிந்த தீர்மானம் பெற்றாலும், தற்போது 95 பேர் ஆதரவளித்திருப்பதாக அல் கிரீன் கூறியுள்ளார்.

இதுபற்றி டிரம்ப் கூறுகையில், “எனக்கு எதிரான குற்றவிசாரணை முயற்சி கேலிக்குரியது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் இதுபோன்று மற்றொரு ஜனாதிபதிக்கு நடப்பதை அனுமதிக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News