செய்திகள்

ஜிம்பாப்வே: தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் பலி?

Published On 2019-02-15 02:25 GMT   |   Update On 2019-02-15 02:25 GMT
ஜிம்பாப்வே தலைநகர் ஹராரே அருகே கடோமா நகரில் உள்ள 2 சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை உடைந்ததில் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹராரே :

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இதில் தலைநகர் ஹராரேயில் இருந்து 145 கி.மீ. தொலைவில் உள்ள கடோமா நகருக்கு அருகே உள்ள 2 சுரங்கங்கள் நீண்ட காலமாக பயன்பாடின்றி கிடக்கின்றன.

இந்த சுரங்கங்களில் சமீபத்தில் சட்ட விரோதமாக நுழைந்த சிலர் தங்க வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், சுரங்கங்களுக்கு அருகே கட்டப்பட்டு இருந்த அணை ஒன்று கடந்த 12-ந்தேதி இரவு திடீரென உடைந்தது. அதிலிருந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளம் 2 சுரங்கங்களிலும் நிறைந்தது. இதில் 23 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஜிம்பாப்வேயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News