செய்திகள்

தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிட தடை - இளவரசி பகிரங்க மன்னிப்பு

Published On 2019-02-13 04:38 GMT   |   Update On 2019-02-13 04:38 GMT
தாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிட தடை விதிக்கப்பட்டதையடுத்து தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். #ThaiPMelection #UbolratanaApologies #MahaVajiralongkorn
பாங்காக்:

தாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.

பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனைதொடர்ந்த்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மார்ச் 24-ந்தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இதையடுத்து இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.

இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்ன் பிப்ரவரி 8ம் தேதி இரவு உத்தரவிட்டார்.

மன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரட்டனா திரும்பப்பெறப்படுவதாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி  தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி அறிவித்தது.

தாய்லாந்தில் வழக்கமாக மன்னர் குடும்பத்தின் பெண்கள் அவ்வளவாக பொதுவெளியில் பேசப்படாத நிலை சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை நீடித்து வந்தது. ஆனால், அந்த மரபுகளை எல்லாம் தகர்த்தெறிந்த இளவரசி  உபோல்ரட்டனா மஹிடோல் அந்நாட்டின் பிரபல சினிமா நடிகையாக விளங்கினார்.

இந்நிலையில் நேற்று இளவரசி உபோல்ரட்டனா தனது இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளத்தில், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

'மக்களுக்காக பணி செய்வதே என் நோக்கமாகும். இந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இவருக்கு சுமார் ஒரு லட்சம் அபிமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #ThaiPMelection #UbolratanaApologies #MahaVajiralongkorn


Tags:    

Similar News