செய்திகள்

ஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறை போராட்டம்- டாவோஸ் பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அதிபர்

Published On 2019-01-22 10:48 GMT   |   Update On 2019-01-22 11:26 GMT
ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், டாவோஸ் பயணத்தை பாதியில் ரத்து செய்த அதிபர் எம்மர்சன், உடனடியாக நாடு திரும்பினார். #ZimbabwePresident
ஹராரே:

ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அறிவிப்பை அதிபர் எம்மர்சன் மனங்காக்வா அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் ஹராரே, தென்மேற்கு நகரமான புலவாயோ போன்ற இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்கின்றனர். இந்த வன்முறைப் போராட்டம் மற்றும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றிருந்த அதிபர் எம்மர்சன் மனங்காக்வா, மாநாட்டில் பங்கேற்காமல் நேற்று இரவே நாடு திரும்பினார்.



பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது சரியான நடவடிக்கைதான் என்றும், பாதுகாப்பு படையினர் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதேசமயம் போராட்டக்காரர்களுக்கும் அதிபர் எம்மர்சன் மனங்காக்வா, கடும் கண்டனம் தெரிவித்தார். போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் இந்த போராட்டம் அமைதியான போராட்டம் அல்ல என்று அவர் கூறினார்.  போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன், காவல் நிலையங்களை சூறையாடி, ஆயுதங்கள் மற்றும் சீருடைகளை திருடிச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். #ZimbabwePresident
Tags:    

Similar News