செய்திகள்

தாதா தொழிலில் மீண்டும் குதித்தது வடகொரியா - அதிபயங்கர போராயுதம் பரிசோதித்து மிரட்டல்

Published On 2018-11-16 06:20 GMT   |   Update On 2018-11-16 06:20 GMT
அணு ஆயுதங்களை வைத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அமெரிக்கா தவறியதால் அதிபயங்கர போராயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. #NorthKorea #threatens
பியாங்யாங்:

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார்.



இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் அன்-னை சந்தித்து பேசினார். விரைவில் இரண்டாவது முறையாக இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் ‘பியாங்ஜின்’ (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா சமீபத்தில் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக ரகசியமாக தயாரிக்கப்பட்ட பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தவல்ல அதிபயங்கர போராயுதத்தை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்ததாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பரிசோதனையை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன் திருப்தி தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தை மீறிய வகையில் நடைபெற்ற இந்த பரிசோதனைக்கு அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி சர்வதேச அரசியல் நோக்கர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. #NorthKorea #threatens 
Tags:    

Similar News