செய்திகள்

மானசரோவர் யாத்திரை - 57 பக்தர்கள் கொண்ட முதல் குழு திபத் சென்றடைந்தது

Published On 2018-06-21 14:21 GMT   |   Update On 2018-06-21 14:21 GMT
மானசரோவர் யாத்திரையின் முதல் குழுவில் இடம்பெற்றுள்ள 57 பக்தர்கள் இன்று திபெத் சென்றடைந்தனர். #Mansoravar #Mansoravarpilgrims
திபெத் :

திபெத் நாட்டில் உள்ள மானசரோவர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 4590 மீட்டர் உயரத்தில் கயிலாய மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.

மானசரோவர் ஏரியிலிருந்து சத்லஜ் ஆறு, பிரம்மபுத்திரா ஆறு, சிந்து ஆறு போன்ற முக்கிய ஆறுகள் உற்பத்தியாகிறது.

இந்த ஏரியில் நீராடினாலும், இதன் நீரைப் பருகினாலும் ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. ஏரியைச் சுற்றிப் பார்க்க இந்தியாவில் இருந்து புனிதப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை தொடங்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான யாத்திரையை சிக்கிம் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.சி. குப்தா கடந்த 15-ம் தேதி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலே கணவாய் வழியாகவும், சிக்கிமிலிருந்து நாது லா கணவாய் வழியாகவும் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. நாது லா கணவாய் வழியாகச் செல்வதற்கு கடந்த ஆண்டு சீன அரசு தடைவிதித்தது. டோக்லாம் எல்லை பிரச்சினை காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

டோக்லாம் பிரச்சினை தீர்ந்துள்ளதால் இந்த ஆண்டில் மீண்டும் நாதுலா கணவாய் வழியாக யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.



சிக்கிம் மாநிலம், மாங்த்தி பகுதியில் இருந்து புறப்பட்ட 57 பக்தர்கள் கொண்ட முதல் யாத்ரீகர்கள் குழு, மலைவழியாக நடந்து வந்து கஞ்சி பகுதியில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் 17,500 அடி உயரமுள்ள லிப்புலேக் கணவாய் வழியாக நேற்று மானசரோவர் புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், யாத்திரைக்கு சென்ற முதல் குழுவினர் இன்று திபெத் சென்றடைந்தனர். அவர்களுக்கு தங்கும் அறைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 12 நாட்களுக்கு அவர்கள், மானசரோவரில் அமைந்துள்ள இந்து மற்றும் புத்த மதத்தின் புனித ஏரியாக கருதப்படும் மாபம் யம்கோ ஏரி மற்றும் மவுண்ட் காங்ரின்போ ஏரிகளுக்கு புனித பயணம் செய்ய உள்ளனர். #Mansoravar #Mansoravarpilgrims #Firstbatch
Tags:    

Similar News