செய்திகள்

இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணத்திற்கு பிரிட்டன் ராணி எலிசபெத் சம்மதம்

Published On 2018-03-16 10:34 GMT   |   Update On 2018-03-16 10:34 GMT
பிரிட்டன் இளவரசர் ஹாரி, மேகன் மார்க்லே திருமணத்திற்கு ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார். #PrinceHarry #ElizabethII #MeghanMarkle
லண்டன்:

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர்.

இவர்களது திருமணம் மே மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அவர்களது திருமணம் விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் சேப்பலில் வைத்து நடைபெறும். திருமணத்திற்காக பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.



இந்நிலையில், இளவரசர் ஹாரி திருமணத்திற்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் தனது ஆலோசகர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் ராணி தனது சம்மதத்தை தெரிவித்தார்.

இது குறித்து ராணி எலிசபெத்தின் ஆலோசகர்கள் நேற்று அறிவிக்கை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில், 'எனது அன்பு பேரன் இளவரசர் ஹென்றி சார்ல்ஸ் ஆல்பர்ட் டேவிட் ஆஃப் வேல்ஸ், மேகன் மார்க்லே திருமணத்திற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்கிறேன்' என ராணி எலிசபெத் குறிப்பிட்டிருந்தார். ஹாரி திருமணத்திற்கு பின் கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நாட்டிங்ஹாம் மாளிகையில் வசிக்கவுள்ளார்.  #princeharry #queenelizabeth #tamilnews
Tags:    

Similar News