செய்திகள்

வடகொரியா முதல் குண்டு போடும்வரை ராஜதந்திர முயற்சிகள் தொடரும்: டில்லர்சன்

Published On 2017-10-16 05:33 GMT   |   Update On 2017-10-16 05:33 GMT
அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு மிரட்டி வரும் வடகொரியா முதல் குண்டை போடும் வரை ராஜதந்திர முயற்சிகள் தொடரும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி டில்லர்சன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நா. விதித்துள்ள பொருளதார தடைகளையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தி கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்தது. இதனால் வட கொரியாவின் கோபம் அமெரிக்கா மீது திரும்பி உள்ளது. இரு நாடுகளுக்குமிடையே வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கூறினார். இதனால் மோதல் போக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரெக்ஸ் டில்லர்சன் நேரத்தை வீணாக்குவதாக அதிபர் டிரம்ப் கூறியதால் பேச்சுவார்த்தைக்கான முகாந்திரம் இப்போதைக்கு இல்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், வடகொரியாவுடனான மோதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாக ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வடகொரியா முதல் குண்டு போடும் வரை இந்த ராஜதந்திர முயற்சிகள் தொடரும் என்றும் அவர் சி.என்.என். செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தடைகளும், ராஜதந்திரமும், வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத அளவு, ஒற்றுமையை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் ஒரு முட்டாள் என்று டில்லர்சன் கூறியதாக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை மறுத்த டில்லர்சன், நவீன வரலாற்றில் டிரம்ப் மிகவும் தனித்துவமான ஜனாதிபதி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

Tags:    

Similar News