செய்திகள்

பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவர் சுட்டுக்கொலை

Published On 2017-08-20 03:49 GMT   |   Update On 2017-08-20 03:49 GMT
பாகிஸ்தானில் பட்டபகலில் இஸ்லாமிய கட்சி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தேரா இஸ்மாயில் கான் பகுதியில் இஸ்லாமிய கட்சியான ஜாமியாத் உலமா இஸ்லாம் பாசிலின் தலைவராக இருந்து வந்தவர் மவுலானா சையத் அதவுல்லா ஷா.

இவர் நேற்று காலையில், அங்கு பானு அடா பகுதியில் அமைந்துள்ள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள், அவரை சுட்டு வீழ்த்தி விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சையத் அதவுல்லா ஷா, ஜாமியாத் உலமா இஸ்லாம் பாசிலின் தலைவர் மவுலானா பாஸ்லுர் ரகுமானுக்கு மிகவும் நெருக்கமானவர்.

பன்யாலா என்ற இடத்தை சேர்ந்த சையத் அதவுல்லா ஷா கடந்த சில வருடங்களாக தேரா இஸ்மாயில் கான் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த சம்பவத்துக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை.

சமீப காலமாக தேரா இஸ்மாயில் கான் பகுதியில் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கடந்த 11-ந் தேதி 2 போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் 2 நாட்கள் கழித்து அரசு ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 17-ந் தேதி நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பால் வியாபாரி படுகாயங்களுடன் தப்பினார்.
Tags:    

Similar News