செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தின் மீது தலிபான் தாக்குதல்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

Published On 2017-04-22 10:07 GMT   |   Update On 2017-04-22 10:07 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் ராணுவ தளத்தின் மீது தலிபான் தீவிரவாதிகளின் கோரத்தாண்டவத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த கொலைவெறி தாக்குதலுகு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் தலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்டு வரும் வடக்கு ஆப்கானிஸ்தானின் குன்டுஸ் பகுதி பிராந்திய ராணுவ தலைமையகம் ஒன்றுள்ளது. மஸார்-இ-ஷரிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்குள் பணியாற்றி வரும் வீரர்கள் அந்த வளாகத்தில் இருக்கும் மசூதிக்குள் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜும்மா தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ராணுவ சீருடை அணிந்தபடி சில வாகனங்களுடன் அந்த முகாமுக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இயந்திர துப்பாகிகளால் சுட்டும், சிறிய ராக்கெட்களை ஏவியும், உடல்களில் கட்டிவந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தும் ஆவேச தாக்குதல் நடத்தினர்.



இந்த கொடூர தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த சுமார் 50 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இன்று பிற்பகல் நிலவரப்படி, பலி எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.



இந்த நிலையில், இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, மஸார்-இ-ஷரிப் ராணுவ தளத்தின்மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சோகத்தில் எங்களது பிரார்த்தனையும் இணைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Similar News