செய்திகள்

பாகிஸ்தானில் தலீபான் தளபதி உள்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2017-02-22 22:33 GMT   |   Update On 2017-02-22 22:33 GMT
பாகிஸ்தானில் கராச்சி நகரில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையின்போது, தலீபான் தளபதி ஒருவர் உள்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கராச்சி:

பாகிஸ்தானில் கராச்சி நகரில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையின்போது, தலீபான் தளபதி ஒருவர் உள்பட 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா, பட்டா, பஞ்சாப் மாகாணங்களில் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாகவும், அமெரிக்காவின் தொடர் நிர்ப்பந்தத்தின் காரணமாகவும், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நவாஸ் ஷெரீப் அரசு, பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சமீப காலத்தில் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் மாலிர் பகுதியில் பக்ராபீரி சாலையில் தலீபான் இயக்க பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து கொண்டு, அந்த நகரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவது தொடர்பாக சதித்திட்டம் தீட்டி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று அங்கு விரைந்த போலீசார், தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

உடனே தீவிரவாதிகள், போலீஸ் படையினர்மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் தங்கள் துப்பாக்கிகளால் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது.

அதன் முடிவில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர், பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதி குல் ஜமான் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த துப்பாக்கி சண்டை தொடர்பாக கராச்சி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராவ் அன்வர் நிருபர்களை சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த துப்பாக்கி சண்டையின்போது கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதி குல் ஜமான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொருவர் தாஜ் ஆரிப் லாலா என அடையாளம் தெரிந்துள்ளது. இவர் பாகிஸ்தானில் நடந்துள்ள பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்பு உள்ளவர். 16 வயதே ஆன தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவரும், இந்த துப்பாக்கி சண்டையின்போது பலி ஆனார். சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கைபர் பக்துங்வா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ராஜ்கால் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படையினர் நேற்று வான்தாக்குதல்கள் நடத்தினர்.

இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

Similar News