தமிழ்நாடு

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

Published On 2023-01-28 09:37 GMT   |   Update On 2023-01-28 09:37 GMT
  • அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
  • 2 வாரங்களுக்குள் மீதமுள்ள இடமும் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்பத்தூர்:

வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புடைய 8 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்கும் பணியில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகா தேவி உத்தரவின் பெயரில், உதவி ஆணையர் பாஸ்கரன், செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் தலைமையில் முதற்கட்டமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை மஞ்சங்குப்பம் பகுதியில் 2 கோடியே 40 லட்சம் மதிப்பு உடைய 2 ஆயிரத்து 400 அடி சதுரஅடி நிலம் போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இந்த இடமானது கடந்த 30 வருடங்களுக்கு முன்பு லட்சுமணன் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. சில வருடங்கள் மட்டுமே வாடகை செலுத்திய லட்சுமணனுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணத்தை கட்டவில்லை என்றும், இதுவரையில் வாடகைத் தொகை மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அறநிலையத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்புடைய 2 ஆயிரத்து 400 சதுரஅடி இடம் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் 2 வாரங்களுக்குள் மீதமுள்ள இடமும் மீட்கப்பட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News