தமிழ்நாடு

ரூ.6 ஆயிரம் 21 லட்சம் குடும்பங்களை சென்றடைந்தது... 6 லட்சம் பேர் நிவாரணம் கேட்டு புதிதாக விண்ணப்பம்

Published On 2023-12-21 05:05 GMT   |   Update On 2023-12-21 05:05 GMT
  • அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர்.
  • ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4-ந்தேதிகளில் வீசிய மிச்சாங் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.


அதன்படி அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் வாங்கி உள்ளனர். இதில் இதுவரை 21 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் உள்ள பட்டியலில் பெயர் இல்லாத வசதி படைத்தவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள், ஏ கிரேடு, பி கிரேடு அதிகாரிகளின் வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமானோர் ரேஷன் கடைக்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். அதில் பாதிப்பு விவரங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு எண், செல்போன் எண்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்களை ஆய்வு செய்து அவர்களின் வங்கி கணக்குக்கு ரூ.6 ஆயிரம் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் இப்போது எழுதி கொடுத்த 6 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாளில் பணம் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டத்துக்காக மொத்தம் ரூ.1,500 கோடியை அரசு ஒதுக்கி உள்ள நிலையில் இதுவரை ரூ.1260 கோடி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. பணம் கிடைக்காதவர்களுக்கு சனிக்கிழமைக்குள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News