தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்- கேரள அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம்

Published On 2024-05-27 08:35 GMT   |   Update On 2024-05-27 08:35 GMT
  • கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
  • விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கூடலூர்:

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையாக உள்ளது. 152 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் பலமிழந்து விட்டது என்றும், அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.

இது குறித்து உச்சநீதிமன்றம் வல்லுனர் குழுவை அமைத்து அணை பலமாக உள்ளது. இதனால் அருகில் உள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்பு கூடுதல் தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கேரள அரசு கடிதம் எழுதி புதிய அணை கட்ட இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தது. கேரள அரசின் மனு மீது நாளை (28-ந் தேதி) விசாரணை நடைபெறுகிறது. 11 பேர் கொண்ட குழுவினர் இந்த மனு மீது விசாரணை நடத்த உள்ளனர்.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 மாவட்ட விவசாயிகள் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தனர். பேரணியாக சென்று பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனால் தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளி நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று காலை லோயர் கேம்ப் பஸ் நிலையத்தில் முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமையில் விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன் முன்னிலையில் திரண்ட விவசாயிகள் அங்கிருந்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு சென்றனர். அதன் பின்பு பேரணியாக செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கேரள அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து முல்லைப்பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், கேரளாவில் எந்த அரசு அமைந்தாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கடந்த சட்டசபை தொடரின் போதே கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அப்போது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது. உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பையே மதிக்காதது கேரள அரசு. சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைக்கட்டி வந்த போது பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து அதனை தடுத்து நிறுத்தியுள்ளது. அதே போல உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி புதிய அணை கட்ட முடியாது என்று தெரிந்தும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு மனு அளித்துள்ளது. எனவே உச்சநீதிமன்றமும் தாமாக முன் வந்து கேரள அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இதற்கு பின்பும் முல்லைப்பெரியாறு அணையை வைத்து கேரளா அரசியல் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

Tags:    

Similar News