தமிழ்நாடு

படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த ராமேசுவரம் மீனவர்கள் மீட்பு

Published On 2022-10-25 05:46 GMT   |   Update On 2022-10-25 05:46 GMT
  • நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி-பாம்பனுக்கு இடையே 8 நாட்டிக்கல் தென்கிழக்கு கடல்பகுதியில் சூடை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தினர்.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் இருந்து நேற்று அதிகாலை ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் மகேஸ்வரன், ராஜ்குமார், முனீஸ்வரன், முருகேசன் உள்ளிட்ட 9 மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் நேற்று நள்ளிரவு தனுஷ்கோடி-பாம்பனுக்கு இடையே 8 நாட்டிக்கல் தென்கிழக்கு கடல்பகுதியில் சூடை மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பைபர் படகு என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் படகில் இருந்து 9 மீனவர்களும் நடுக்கடலில் நீண்ட நேரம் தத்தளித்தனர்.

பல மணி நேரத்துக்கு பின்னர் அந்தப்பகுதியில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்கள் கடலில் உதவி கேட்டு தத்தளிப்பதை கண்டு அவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை பத்திரமாக தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கரைக்கு அழைத்து வரப்பட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News