தமிழ்நாடு

மேலப்பாளையம் சந்தையில் ஆடுகளுடன் குவிந்த வியாபாரிகள்- செங்கிடா ரூ.23 ஆயிரத்துக்கு விற்பனை

Published On 2022-08-09 09:59 GMT   |   Update On 2022-08-09 09:59 GMT
  • ஆடி மாதம் என்பதால் ஏராளமான கிராமங்களில் கோவில் கொடைகள் நடைபெற்று வருகிறது.
  • ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையத்தில் டக்கரம்மாள்புரம் சாலையில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, கருவாடு உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். முக்கிய விழா காலங்களில் ஆடுகள் விலை எதிர்பாராததை விட அதிகமாக இருக்கும்.

தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமான கிராமங்களில் கோவில் கொடைகள் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

இதையொட்டி இன்று மேலப்பாளையம் சந்தைக்கு நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் புதுவரவாக கராச்சி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 30 கிலோ எடை கொண்ட அந்த வகை ஆடுகள் ரூ.19 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

செங்கிடா, கருங்கிடா உள்ளிட்டவைகளும் சந்தைக்கு வந்திருந்தன. கொம்பு அதிக நீளம் கொண்ட செங்கிடாக்கள் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News