மதுரை திருநகரில் மளிகை கடைக்காரர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்ட கணவன்-மனைவி அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் பொன்ராஜ் வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருநகர் லைன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55). இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் அமெரிக்காவிலும், மற்றொரு மகன் பெங்களூருவிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
பொன்ராஜ் திருநகர் 3-வது பஸ் நிறுத்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருடன் மனைவி ராமலட்சுமியும் கடையை கவனித்து வந்தார். தினமும் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காலையில் கடைக்கு சென்று விட்டு இரவில் தான் வீட்டிற்கு திரும்பி வருவார்கள்.
அதேபோல் நேற்று காலை கடைக்கு சென்ற அவர்கள், இரவு 11 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. யாரோ மர்ம நபர்கள் பொன்ராஜ் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் பொன்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பொன்ராஜ் வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி சம்பவ இடத்திற்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து அருகில் உள்ள கண்மாய் வரை ஓடிசென்று நின்றுவிட்டது. இதனால் பொன்ராஜ் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் அந்த வழியாகத்தான் தப்பி சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
பொன்ராஜ் தினமும் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியை அழைத்து கொண்டு கடைக்கு செல்வதை அவரது வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் முன்னதாகவே நோட்டமிட்டு வந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
இதனால் அவரது வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் பட்டப்பகலில் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.