கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறப்பு- ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
- ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 31-வது நாளாக தடை விதித்துள்ளது.
பென்னாகரம்:
கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்து 1 லட்சத்து 32 ஆயிரம் கனஅடி உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி தொடர்ந்து 4-வது நாளாக ஒகேனக்கல்லுக்கு அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 31-வது நாளாக தடை விதித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.