தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்திய 212 பேர் கைது- தமிழக அரசு நடவடிக்கை

Published On 2022-09-08 02:45 GMT   |   Update On 2022-09-08 02:45 GMT
  • விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
  • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 41 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டு உள்ளன.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும், அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தடுப்பு காவலில் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 22-8-2022 முதல் 28-8-2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் ரூ.8 லட்சத்து 35 ஆயிரத்து 70 மதிப்புள்ள, 1,478 குவிண்டால் அரிசியும், அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 41 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டு உள்ளன. மேலும், அக்குற்றச் செயலில் ஈடுபட்ட 212 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News