தமிழ்நாடு
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு

Published On 2022-03-30 10:27 GMT   |   Update On 2022-03-30 10:27 GMT
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உள்பட 9 பேர் மதுரை சிறையில் உள்ளோம்.

வழக்கை 6 மாதங்களுக்குள் கீழமை நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மீண்டும் கால அவகாசம் வழங்கி ஓராண்டு ஆகிவிட்டது. 20 மாதங்களுக்கும் மேலாக, நீதிமன்ற காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது.

எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்”என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. உயிரிழந்த ஜெயராஜின் மனைவி இந்த வழக்கில், தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரினார்.

சி.பி.ஐ. தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் “இந்த சூழலில், ஜாமீன் வழங்கினால், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால், ஜாமீன் வழங்கக்கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து நீதிபதி, ஜெயராஜின் மனைவி தரப்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News