தமிழ்நாடு
பதட்டமான வாக்கு சாவடிகளில் கமிஷனர் ரவி நேரில் ஆய்வு
தாம்பரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 67 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் போலீஸ் கமிஷனர் ரவி நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை:
தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைதியான முறையில் தேர்தலை நடத்த போலீஸ் கமிஷனர் ரவி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கி உள்ளார். சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தாம்பரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 67 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் போலீஸ் கமிஷனர் ரவி நேரில் ஆய்வு செய்தார்.
கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி பகுதிகளில் ஆய்வு செய்த அவர் பொதுமக்களை சந்தித்தும் பேசினார். வாக்குச்சாவடி மையங்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்களிடம் அவர் நேரில் விசாரித்தார்.
உங்கள் பகுதியில் பிரச்சினைகள் ஏதும் உள்ளதா? என்று அவர் பெண்களிடம் கேட்டறிந்தார். அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்தும் கமிஷனர் ரவி பேசினார்.
அப்போது அவர்களிடம் என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டதுடன் பிஸ்கட் உள்ளிட்ட தின் பண்டங்களையும் வாங்கி கொடுத்தார். பின்னர் சிறுவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.