தமிழ்நாடு
வழக்கு

களக்காடு அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து - டாக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2022-01-30 06:43 GMT   |   Update On 2022-01-30 06:43 GMT
களக்காடு அருகே உள்ளாட்சி தேர்தல் தகராறில் விவசாயியை தாக்கிய சம்பவம் குறித்து டாக்டர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (44). விவசாயி.

இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பல் டாக்டர் கார்த்திக் என்பவருக்கும் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

சம்பவத்தன்று நம்பிராஜனின் உறவினர் உதயகுமார் வடுகச்சிமதிலில் உள்ள அரசமரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அவரை இங்கு நிற்க கூடாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

அதன்பின் அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் நம்பிராஜன் வீட்டிற்கு வந்து, அவரிடம் டாக்டர் கார்த்திக் அழைத்து வர சொன்னதாக கூறி உள்ளார்.

இதையடுத்து நம்பிராஜன் பல் டாக்டர் கார்த்திக் வீட்டிற்கு சென்றார். அங்கு ஏற்பட்ட தகராறில் கார்த்திக், குமார், ராமச்சந்திரன், ஈஸ்வரன், பாண்டி ஆகியோர் சேர்ந்து நம்பிராஜனை அவதூறாக பேசி தாக்கினர். கத்தியாலும் குத்தினர்.

இதனால் படுகாயம் அடைந்த நம்பிராஜன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக பல்டாக்டர் கார்த்திக் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News