செய்திகள்
மாயமான நாய்

வந்தவாசி அருகே மாயமான நாயை கண்டுபிடிக்க போஸ்டர் ஒட்டிய டிரைவர்

Published On 2020-06-03 06:41 GMT   |   Update On 2020-06-03 06:41 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மாயமான நாயை கண்டுபிடிக்க டிரைவர் ஒருவர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்கொடுங்காலூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், கார் டிரைவர். இவர் கடந்த 12 ஆண்டுகளாக செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்தார். அதற்கு டைசன் என்று பெயர் சூட்டியிருந்தார். அதனை அவர் காவேடு கிராமத்தில் வசிக்கும் தனது அக்காள் மகன் பாலமுருகனிடம் கொடுத்து விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.

கடந்த 29-ந் தேதி வெளியே சென்ற நாய் திடீரென மாயமாகி விட்டது. அதனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த சிவகுமார் தனது வளர்ப்பு நாய் படத்துடன் போஸ்டர் அச்சடித்து அதனை மீட்டு தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அந்த போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் அந்த நாயை மீட்க ஆர்வம் காட்டினர்.

இதைத்தொடர்ந்து மாயமான நாய் ஒரு ஏரிக்கரையில் இருப்பதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் அதனை பிடித்து கடந்த 31-ந்தேதி சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். வேறு நாய்கள் துரத்தியதால் அது வழி மாறி ஏரிக்கரைக்கு வந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். அதனை பெற்று கொண்ட அவர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கினார்.

இந்த காலத்தில் நாய் மீது இப்படியும் ஒரு அன்பா? என்று அனைவரும் பாராட்டினர்.
Tags:    

Similar News