செய்திகள்
தென்காசி, திருவாரூர் மாவட்டங்களிலும் நாளை முழு ஊரடங்கு
தென்காசி மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதேபோல் சேலம், திருப்பூர் மாநகராட்சியில் நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
இதுதவிர கடலூர், தென்காசி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சியில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். பிற கடைகள் எதுவும் திறக்கப்படாது, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.