செய்திகள்
ஆலந்தூரில் திறக்கப்பட்ட புதிய நடை மேம்பாலம்

மெட்ரோ ரெயில் பயணிகளுக்காக 256 புதிய கார்கள்

Published On 2020-02-05 06:56 GMT   |   Update On 2020-02-05 06:56 GMT
சென்னையில் 32 மெட்ரோ ரெயில் நிலைய பயணிகள் வசதிக்காக 256 புதிய கார்கள் வசதி விரைவில் தொடங்கப்படுகிறது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் சேவை நடந்து வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ நிறுவனம் செய்து வருகிறது.

ஆலந்தூரில் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரூ. 9.7 கோடி செலவில் புதிய நடை மேம்பாலத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். ‘எஸ்கலேட்டர்’, ‘லிப்ட்’ படிக்கட்டுகளுடன் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ பயணிகள் வசதிக்காக வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் 256 புதிய இணைப்பு கார் வசதி செய்யப்படும். இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பயணிகள் எளிதில் வந்து சேர முடியும் ‘ஸ்மார்ட் கார்டு, ‘ஆன்லைன்’ மூலம் பணம் செலுத்தி இணைப்பு கார்களில் பயணம் செய்யலாம்.

தற்போது 16 மெட்ரோ ரெயில் நிலையங்களில் 32 இணைப்பு கார்கள் வசதி உள்ளது. பயணிகளுக்கு இது போதுமானதாக இல்லை. எனவே விரைவில் கூடுதலாக 256 இணைப்பு கார்கள் வசதி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News