செய்திகள்
குணா-தினேஷ்-பிரசன்னா

திருமங்கலம் அருகே விபத்து- 3 வாலிபர்கள் பலி

Published On 2019-11-23 04:27 GMT   |   Update On 2019-11-23 04:27 GMT
திருமங்கலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ்சும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 26). இவருக்கு நேற்று பிறந்தநாள். இதனை கொண்டாட மதுரை பழங்காநத்தத்தில் உள்ள நண்பர்கள் பிரசன்னகுமார் (26), குணா (23) ஆகியோரது போட்டோ ஸ்டூடியோவிற்கு சென்றார்.

அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் தினேசை வீட்டில் விடுவதற்காக பிரசன்னகுமார், குணா ஆகியோர் காரில் புறப்பட்டனர்.

மதுரை-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வேடர்புளியங்குளம் அருகே கார் சென்றது. அப்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.

விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3 பேரும் காருக்குள்ளேயே நசுங்கினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காரில் இருந்த தினேஷ், குணா, பிரசன்னகுமார் ஆகியோர் உடல் நசுங்கி காருக்குள்ளேயே பிணமானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 இளைஞர்கள் அதிகாலையில் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News