செய்திகள்
திமுக பிரமுகர் ராஜா

மதுரையில் திமுக பிரமுகர் கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-08-22 05:05 GMT   |   Update On 2019-08-22 05:05 GMT
மதுரை கே.புதூரில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை:

மதுரை கே.புதூர் ராம வர்மா நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 47), தி.மு.க. பிரமுகர். இவர் நேற்றிரவு ஜவகர்புரம் டாஸ்மாக் கடைக்கு சென்றார்.

அங்கு மது குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.

ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்பதை உணர்ந்த ராஜா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ராஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் கே.புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கே.புதூரில் படுகொலை செய்யப்பட்ட ராஜா, ரியல் எஸ்டேட் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பது உள்ளி ட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார். ராஜாவுக்கு சேவல் சண்டையில் தீவிர ஆர்வம் உண்டு.

ராஜா கடந்த 2016-ம் ஆண்டு சேவல் சண்டைக்காக நண்பர்களுடன் வாடிப்பட்டிக்கு சென்றார். அப்போது வாடிப்பட்டி ஸ்ரீதர் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், ராஜாவின் பெயர் 5-வது குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தது. எனவே ஸ்ரீதர் தரப்பினர் பழிக்குப்பழியாக ராஜாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ராஜா கொலை தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News