செய்திகள்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுமிதியின்றி மணல் கடத்திய 2 லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள கொண்டமா நல்லூர் கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான 2 லாரிகளை போலீசார் மடக்கினர்.
உடனே லாரிகளில் இருந்த டிரைவர்கள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
லாரிகளில் போலீசார் சோதனை செய்த போது அதில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலுடன் லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
மணல் யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.