செய்திகள்

வாழப்பாடியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

Published On 2018-09-05 07:22 GMT   |   Update On 2018-09-05 07:22 GMT
வாழப்பாடியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#Bribe

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள நில அளவை பிரிவில் வாழப்பாடி அக்ரகாரம் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் தனக்கு சொந்தமான 2 வீட்டுமனைகளை அளந்து தனிபட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்தார்.

அப்போது அங்கிருந்த ஊழியர் சவுந்திரராஜன் என்பவர் ரூ.20ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மாற்றித்தருவதாக கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இந்திராணி புகார் கொடுத்தார்.

இதையடுத்து சவுந்திரராஜனை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இன்று காலை இந்திராணி சவுந்திரராஜனை வாழப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பூக்கடைக்கு வருமாறும், அங்கு வைத்து பணம் தருவதாகவும் கூறினார். இதனால் சவுந்திரராஜன் பூக்கடைக்கு வந்தார்.

அப்போது இந்திராணி ரசாயண பொடி கலந்த ரூ.10ஆயிரம் நோட்டுகளை சவுந்திரராஜனிடம் வழங்கினார். அந்த சமயம் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு சவுந்திரராஜனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News