செய்திகள்

வியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு - கடை ஊழியர் கைது

Published On 2018-08-19 08:03 GMT   |   Update On 2018-08-19 08:03 GMT
வியாசர்பாடி நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருடிய கடை ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் நகை அடகு கடை நடத்தி வருபவர் ராஜேந்திரகுமார், ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடையில் மூர்த்திங்கர் தெருவை சேர்ந்த ரகு (வயது 23). கடந்த 5 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். கடை உரிமையாளருக்கு நம்பிக்கையாக பணியாற்றி வந்தார்.

ரகு அடிக்கடி கடை உரிமையாளர் வீட்டுக்கு சென்று வந்தான். 3 மாதத்துக்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்த சென்றபோது அங்கிருந்த பணம் ரூ. 7 லட்சம் நகை 33 பவுன் ஆகியவற்றை திருடிக் கொண்டு வந்துவிட்டான்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நகை-பணம் திருடப்பட்டது அவருக்கு தெரிந்தது. இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணை நடத்தி கடை ஊழியர் ரகுவின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது மறுநாள் வீட்டில் இருந்து நகை, பத்திரத்துடன் ரகு தப்பிச் செல்ல முயன்றான்.

போலீசார் அவனை பிடித்து சோதனையிட்டனர். அப்போது ரூ. 2 லட்சம் பணம், 33 பவுன் நகை, பத்திரங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

அவனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்த போது 3 மாதத்துக்கு முன்பே கடை உரிமையாளரின் வீட்டில் ரூ. 7 லட்சம் பணம், 33 பவுன் நகை திருடியதாக கூறினான். திருடிய பணத்தில் ரூ. 5 லட்சத்துக்கு விழுப்புரத்தில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கியதாகவும் தெரிவித்தான். அந்த பத்திரம் மற்றும் ரூ. 2 லட்சம் பணம், 33 பவுன் நகை ஆகியவற்றை போலீசார் மீட்டு அவனை கைது செய்தனர்.

Tags:    

Similar News