செய்திகள்
குட்டையில் மூழ்கி பலியான ரிமாஸ்ரீ, ஹரிசுதன்.

திருவாரூர் அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் - சிறுவன் பலி

Published On 2017-04-28 04:33 GMT   |   Update On 2017-04-28 04:33 GMT
திருவாரூர் அருகே உள்ள வில்வனம்படுகை கிராமத்தில் குட்டையில் மூழ்கி 3 குழந்தைகள் பலியாகினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள வில்வனம்படுகை கிராமத்தில் வசித்து வருபவர் முருகானந்தம். நன்னிலம் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ரிமாஸ்ரீ (7), மகன் ஹரிசுதன் (6). இவர்களில் ரிமாஸ்ரீ 2-ம் வகுப்பும், ஹரிசுதன் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். முருகானந்தம் மைத்துனர் பழனிவேல் தண்டலையில் வசித்து வருகிறார்.

இவரது மகள் தரணிகா (13). அங்குள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தனது மாமா முருகானந்தம் வீட்டிற்கு வந்து இருந்தார்.

அவர் நேற்று மாலை முருகானந்தம் குழந்தைகளுடன் வீடு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள குட்டையில் குளிப்பதற்காக இறங்கிய போது சேற்றில் சிக்கி தவித்தனர்.

அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் சேற்றில் மூழ்கினர். அவர்களை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டனர். ஆனால் ரிமாஸ்ரீ, ஹரிசுதன் ஆகியோரை பிணமாக தான் மீட்க முடிந்தது.

அபாய நிலையில் இருந்த தரணிகாவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Similar News