செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி அடித்து கொலை: மனைவி வெறிச்செயல்

Published On 2017-04-27 11:13 GMT   |   Update On 2017-04-27 11:13 GMT
உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவி விவசாயியை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்தவர் சீமோன்(வயது 42). விவசாயி. இவரது மனைவி ஜோஸ்பின்மேரி. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சீமோன்-ஜோஸ்பின்மேரி இருவரும் பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

ஜோஸ்பின்மேரி தன் கணவரை சந்தித்து ஒன்றாக குடும்பம் நடத்துவோம் என பலமுறை கூறிவந்தார். அதை சீமோன் ஏற்கவில்லை.

நேற்று மாலை சீமோன் தனது வயலில் வேலைபார்த்து கொண்டிருந்தார். ஜோஸ்பின்மேரியும், சீமோனின் தம்பி ஜான்பீட்டரும் அங்கு வந்தனர். அப்போது ஜோஸ்பின்மேரி தன் கணவரை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.

அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த ஜோஸ்பின்மேரியும், ஜான்பீட்டரும் தடியால் சீமோனை தலையில் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சீமோனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் இன்று காலை சிகிச்சை பலனிக்காமல் சீமோன் பரிதாபமாக இறந்தார்.

இந்தசம்பவம் தொடர்பாக எலவனாசூர் கோட்டை போலீசார் ஜோஸ்பின்மேரி, ஜான்பீட்டர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News